மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தலைமைப் பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீர் தற்போது கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிராவிட் விலகிய நிலையில், அந்தப் பதவிக்கு கம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சூழலில் கம்பீர் தமக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தான் வேண்டும் என ஒற்றை காலில் நின்று மோர்னே மோர்கல், ரியான் டோசேட் போன்ற வீரர்களை கேட்டு வாங்கினார். மேலும் அபிஷேக் நாயரையும் தனது குழுவில் கம்பீர் சேர்த்து இருக்கிறார்.

அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டோசேட் ஆகியோர் பெரிய அளவு சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்கள். இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கம்பீர் டி20, ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடினாலும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் அவர் பெரிய தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தியதில்லை.
இதனால் கூடுதலாக பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவு எடுத்திருக்கிறது. மேலும் டோசேட், அபிசேக் நாயர் ஆகியோரை பதவி விட்டு நீக்கிவிடலாம் என்ற முடிவிலும் பிசிசிஐ இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பேட்டிங் பயிற்சியாளராக லக்ஷ்மன் வர இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் லக்ஷ்மன் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிந்து வருகிறார்.
இதனால் வேறு ஒரு ஸ்டார் வீரர் இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி தொடர் தோல்வியை தழுவி வந்ததால் இந்த மாற்றத்தை பிசிசிஐ மேற்கொள்ளப் போகிறது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அல்லது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய பேட்டிங் ஆலோசகரை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அபிஷேக் நாயர் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்கு என்ன பேட்டிங் சொல்லித் தரப் போகிறார் என ஏற்கனவே கவாஸ்கர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் கம்பீர் ஒரு பேட்ஸ்மேன் ஆக இருக்கும் நிலையில், கூடுதலாக ஒரு பேட்டிங் ஆலோசகரை நியமித்தால் பின் கம்பிருக்கு ஏன் அந்த பதவி என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.