மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பிசிசிஐ விரைவில் அதிர்ச்சி கொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ-யின் வருடாந்திர வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில், இவர்கள் இருவரையும் மிக உயரிய பிரிவான 'ஏ பிளஸ்' (A+) -இல் இருந்து கீழே இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், இளம் கேப்டன் சுப்மன் கில்லுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் (AGM) வரும் டிசம்பர் 22-ம் தேதி இணைய வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரை) வீரர்களின் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் தான் ரோஹித் மற்றும் கோலியின் ஒப்பந்த மாற்றம் குறித்த முடிவு எடுக்கப்படவுள்ளது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஓராண்டில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் (ODI) மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர்.
பிசிசிஐ விதிகள் மற்றும் நடைமுறைப்படி, கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே மிக உயரிய 'ஏ பிளஸ்' (A+) ஒப்பந்தம் வழங்கப்படும். ரோஹித் மற்றும் கோலி தற்போது ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுவதால், அவர்களை 'ஏ பிளஸ்' பிரிவில் தக்கவைப்பது சரியாக இருக்காது என்று பிசிசிஐ கருதுகிறது. இதனால் அவர்கள் 'ஏ' (Grade A) அல்லது அதற்குக் கீழான பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.
மூத்த வீரர்களுக்குச் சறுக்கல் என்றால், இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு இது அதிர்ஷ்ட நேரமாகும். தற்போது இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், மூன்று வடிவங்களிலும் அதிக போட்டிகளில் விளையாடி வருகிறார். எனவே, அவரை 'ஏ' பிரிவில் இருந்து 'ஏ பிளஸ்' பிரிவு ஒப்பந்தத்துக்கு உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 'ஏ பிளஸ்' பிரிவில் உள்ளனர். இதில் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் சுப்மன் கில் புதிதாக இணைவார்.
இந்தக் கூட்டத்தில் ரோஹித், கோலி விவகாரம் மட்டுமின்றி, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தம் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
ரோஹித் மற்றும் கோலி இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பங்குகளுக்காக அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா அல்லது விதிகளின்படி கிரேடு குறைக்கப்படுமா என்பது டிசம்பர் 22-ம் தேதி தெரிந்துவிடும்.