14 நாட்கள்.. திக்.. திக்.. நிமிடங்கள் - பிசிசிஐ மானத்தை காக்குமா இங்கிலாந்து டூர் 'பயோ-பபுள்'?
மும்பை: ஐபிஎல் பயோ-பபுள் கொரோனவால் தவிடுபொடியானது போன்று, இங்கிலாந்து டூரில் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதில் பிசிசிஐ மிக மிக எச்சரிக்கையாக உள்ளது.
ஐபிஎல் 2021 தொடரை, உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தொடங்கியது பிசிசிஐ. பயோ-பபுள் விதிமுறைகள் கடுமையாக இருந்தன. வீரர்களே மனம் விட்டு புலம்பும் அளவுக்கு ஸ்ட்ரிக் விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன.
ஆனால், அனைத்தையும் தகர்த்த கொரோனா, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தியை அட்டாக் செய்தது. சரி.. அவரை தனிமைப்படுத்தி தொடரை நடத்தலாம் என்று பிசிசிஐ சிந்திக்கக் கூட நேரம் தராமல், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், சன் ரைசர்ஸ் அணி வீரர் என்று அடுத்தடுத்து கொரோனா போட்டுத் தாக்க அரண்டு போன பிசிசிஐ, தொடரை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

வீரர்கள் தயார்
இந்த சூழலில் தான், இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

பேட்ச் பேட்சாக
இதற்காக இந்திய அணி வீரர்கள், நாளை (மே.19) புதன்கிழமை முதல், மும்பையில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதற்கான பயோ - பபுள் பிராசஸ் தொடங்குகிறது. இதில், அனைத்து வீரர்களும் கட்டாயம் இடம் பெற உள்ளார்கள். இந்த தனிமைப்படுத்தலில், வீரர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். பிறகு, ஒவ்வொரு பேட்ச் பேட்சாக பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஹோட்டல் - பயிற்சி இடம் - ஹோட்டல். இதுதான் வீரர்களது தினசரி நடவடிக்கையாக இருக்குமாம்.

படு உஷார்
இதற்கிடையில், வீரர்கள் வேறு எந்த இடத்திற்கும் செல்ல முடியாத வகையில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் எவரையும் வீரர்கள் பார்க்க அனுமதி கிடையாது. அது குடும்பம் சார்ந்த மிக அவசர விஷயமாக இருந்தாலும், அவர்கள் வீரர்களை நேரடியாக சந்தித்து பேச முடியாதாம். இவ்வளவு ஸ்ட்ரிக் நடவடிக்கைக்கு காரணம், ஐபிஎல் பயோ-பபுள் தோல்வி தான் என்று கூறப்படுகிறது. அவ்வளவு கடுமையான பாதுகாப்பை மேற்கொண்டிருந்த போதும், ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. ஆகையால், இம்முறை அதுபோன்று அந்த தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக உள்ளதாம் பிசிசிஐ.

மூன்று நெகட்டிவ் ரிசல்ட்
முன்னதாக, மும்பைக்கு வெளியே வசிக்கும் வீரர்கள் அனைவரும் அவரவர்கள் தங்கள் காரிலோ, விமானத்திலோ மும்பை வர வேண்டும் என்று கூறிய பிசிசிஐ, இப்போது அவர்களை அழைக்க தனி விமானம் தயார் செய்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம், மும்பை பயோ - பபுளில் இணைவதற்கு முன்பு, வீரர்கள் அனைவரும் மூன்று முறை கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மூன்றிலும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அவர்கள் மும்பைக்கே அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு, ஜூன் 2ம் தேதி இந்திய அணி, இங்கிலாந்து கிளம்பிச் செல்கிறது.

அதே விதிமுறை
வீரர்களுக்கு எடுக்கப்படும் அதே கொரோனா பரிசோதனை முறைகள் தான் அவர்களது குடும்பத்தினருக்கும் எடுக்கப்பட உள்ளது. ஸோ, அவர்களும் மும்பை பயோ - பபுளில் இணைவதற்கு முன்பு மூன்று முறை பரிசோதனை மேற்கொண்டு, அனைத்திலும் நெகட்டிவ் என்று ரிசல்ட் கொடுக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் கண்டிப்பாக இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேசமயம், வீரர்களின் குடும்பங்கள் இந்தியாவுக்கு வர, இன்னும் க்ளீயரன்ஸ் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications