
டி20 தொடர்
கால்பந்தை விட கிரிக்கெட் மூலமும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதை உலகிற்கு காட்டியது பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர். இது பிசிசிஐக்கு தங்க முட்டை இடும் வாத்தாக உள்ளது. பி சி சி ஐ யின் இந்த நடவடிக்கை பார்த்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விளையாடும் தேசங்கள் தங்களுக்கென ஒரு டி20 தொடரை உருவாக்கினர்.

பிசிசிஐ விதி
ஐபிஎல் தொடரில் மற்ற நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள். ஆனால் மற்ற நாடுகளில் நடத்தப்படும் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் இந்திய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ இதுவரை அனுமதி தரப்படவில்லை. ஒருவேளை அவர்கள் மற்ற நாடுகளில் விளையாடினால் இந்திய அணிக்கு எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.

முக்கிய முடிவு
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள பி சி சி ஐ பொதுக்குழு கூட்டத்தில் மற்ற நாடுகள் நடத்தும் டி20 தொடரில் இந்திய வீரர்களை அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ஒருவேளை பிசிசிஐ இதற்கு அனுமதி அளித்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகாத வீரர்கள் பலர் வெளிநாட்டுச் சென்று அங்குள்ள டி20 தொடரில் விளையாட முடியும்.

யார் பயன்பெறுவார்கள்?
ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின், சஞ்சு சம்சன் , ஷிகர் தவான், உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் வெளிநாட்டு தொடரில் பங்கேற்று அதன் மூலம் அனுபவத்தையும் பணத்தையும் சம்பாதிக்க முடியும். 15 ஆண்டுகளாக இந்திய வீரர்களை வெளிநாடுகளுக்கு விளையாட அனுமதிக்காத பிசிசிஐ தற்போது ஏன் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளது என்பது குறித்து சந்தேகம் வருகிறது அல்லவா.

திடீர் முடிவு ஏன்?
அதற்கும் காரணம் இருக்கிறது. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் தற்போது வெளிநாடுகளிலும் தங்களது இரண்டாவது அணிகளை வாங்குகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடரில் அனைத்து அணிகளுமே ஐபிஎல் அணி நிர்வாகிகள் வாங்கி விட்டனர். இதனால் இந்திய வீரர்கள் அந்த தொடரில் விளையாடினால் ஐபிஎல் அணிகளுக்கும் லாபம் கிடைக்கும். ஐபிஎல் தொடர் வரும்போது அவர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருப்பார்கள். இதனால் ஐபிஎல் அணிகள் விடுத்த கோரிக்கை குறித்து பிசிசிஐ வரும் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications