இப்பதான் ஒரு உலகக்கோப்பை முடிஞ்சுச்சு.. அதற்குள் 20 வீரர்களுக்கு குறி வைத்த பிசிசிஐ.. மெகா திட்டம்
மும்பை: 2026 டி20 உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், அடுத்ததாக 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு இப்போதே தயாராகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் கோப்பையை நூலிழையில் தவறவிட்ட நிலையில், இம்முறை எப்படியும் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் பிசிசிஐ ஒரு பெரிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. அதன்படி, ஐபிஎல் 2026 தொடரை ஒரு முக்கியமான வாய்ப்பாகப் பயன்படுத்தி, சிறந்த வீரர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக சுமார் 20 வீரர்கள் கொண்ட ஒரு ரகசியப் பட்டியலைத் தேர்வுக் குழு தயார் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் இந்த 20 வீரர்களின் ஆட்டமும் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளது. இதற்காகத் தேர்வுக் குழு உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மைதானங்களுக்கு நேரடியாகச் சென்று வீரர்களின் ஐபிஎல் செயல்பாடுகளை ஆராய உள்ளனர். ஒவ்வொரு தேர்வாளரும் வாரத்திற்கு ஒரு போட்டியையாவது மைதானத்தில் நேரில் பார்க்க வேண்டும் அல்லது தொலைக்காட்சியில் வீரர்களின் ஆட்டத்தைக் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளம் வீரர்களுக்குத் தடையா?
அனுபவம் வாய்ந்த மற்றும் ஏற்கனவே அணியில் தங்களை நிரூபித்த வீரர்களுக்கு மட்டுமே இம்முறை முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக, 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி போன்ற புதிய வீரர்களுக்கு இந்த உலகக்கோப்பைத் தொடருக்கான கதவுகள் இப்போதைக்குத் திறக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள்
வேகப்பந்து வீச்சுப் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வர் முதன்மையான வீரர்களாகக் குறிவைக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாகப் போட்டிகளில் இருந்து விலகியுள்ள ஹர்ஷித் ராணா குணமடைந்த பிறகு அவரது பெயர் பரிசீலிக்கப்படும். அதேபோல், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி மற்றும் ஃபார்ம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதே சமயம், 2023 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி குறித்து இந்த அறிக்கையில் எந்தத் தகவலும் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 2027 ஒருநாள் உலகக்கோப்பையைத் தொடரே பிசிசிஐ-யின் ஒரே இலக்காக உள்ளது. 2028 டி20 உலகக்கோப்பை அல்லது ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பது குறித்து பிசிசிஐ இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக்கோப்பையை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதே பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications