மும்பை: இந்திய அணியில் ஏழு சிறந்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்வை பிசிசிஐ தேர்வுக் குழு முடிவுக்கு கொண்டு வந்தார் என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பரபரப்பாக குற்றம் சுமத்தி இருக்கிறார். மேலும், அந்த காரணத்தால் இந்திய அணி தோல்விகளை சந்தித்ததாகவும், அதை சாக்காக வைத்து கேப்டன் தோனியை நீக்க அப்போதைய தேர்வு குழு தலைவர் மொகிந்தர் அமர்நாத் முடிவு செய்ததாகவும் யோக்ராஜ் சிங் கூறி இருக்கிறார்.
2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அப்போது ஏதோ உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட செல்வது போலத்தான் இந்திய அணி தோனி தலைமையில் டி20 உலக கோப்பைக்கு சென்றது. ஆனால் அந்த உலகக் கோப்பை வென்ற பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

தோனி இந்தியாவின் செல்வாக்கு மிக்க கிரிக்கெட் வீரராக மாறினார். ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாகவும் ஆனார். 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றது. அதன் பிறகு இந்திய அணியில் மாற்றங்களை செய்யப்பட்டது. அது குறித்து தான் யோக்ராஜ் சிங் தற்போது குற்றம் சுமத்தி இருக்கிறார்.
கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், முகமது கைஃப், விவிஎஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட் ஆகிய ஏழு பேரும் 2011 முதல் 2012 ஆம் ஆண்டுக்குள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த ஏழு பேரில் யுவராஜ் சிங் மட்டுமே பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனாலும் அவரால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை.
இது குறித்து யோக்ராஜ் சிங் பேசுகையில், "அப்போது தேர்வுக் குழு இந்த ஏழு பையன்களின் வாழ்வை எந்தக் காரணமும் இல்லாமல் அழித்து விட்டார்கள். கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், முகமது கைஃப், விவிஎஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட் ஆகியோர் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
2011 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியை நாசம் செய்து விட்டார்கள். ஏழு வீரர்களின் வாழ்க்கை முடிந்து விட்டது. அதனால் தான் அதன் பிறகு இந்திய அணி தடுமாறியது. தோனி கேப்டனாக இருந்த போது ஐந்து தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அப்போது தோனியை பதவியில் இருந்து நீக்க போவதாக அப்போதைய தேர்வு குழு தலைவர் மொகிந்தர் அமர்நாத் கூறினார். ஆனால், அதை அப்படி செய்ய முடியாது" என்று ஆவேசமாக கூறியுள்ளார் யோக்ராஜ் சிங்.