மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நட்சத்திர கிரிக்கெட் சர்பிராஸ்கான் சேர்க்கப்படாததற்கு முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபாக்கரிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று சீசன்களுக்கும் சேர்த்து ரஞ்சி கிரிக்கெட்டில் சர்பிராஸ்கான் 2000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். ஆனால் தேர்வு குழுவினர் அவருக்கு ஒரு முறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கவில்லை.

இந்த நிலையில் சர்பிராஸ் கான் சேர்க்கப்படாததற்கு அவருடைய நன்னடத்தை தான் காரணம் என்று தேர்வுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். தேர்வு குழுவின் இந்த கருத்துக்கு சபா கரீம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் தேர்வு குழுவின் விளக்கத்தை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வீரரை கையாள்வதும் அவரை நல்ல விதமாக வழி நடத்துவதும் அணி நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
நான் சர்பிராஸ் கானிடம் நிறைய பேசி இருக்கிறேன். எனக்கு தெரிந்து அவர் மீது எந்த தவறும் இல்லை. அப்படி ஏதேனும் பிரச்சனை இருந்திருந்தால் அவர் எப்படி மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி இருக்க முடியும். மும்பை பயிற்சியாளரோ இல்லை மும்பை அணி கேப்டனோ சர்ப்ராஸ்கான் குறித்து இதுவரை எந்த புகாரமே தெரிவிக்கவில்லை. அணி நிர்வாகமும் சப்ராஸ்கான் மீது எந்த குறையும் சொல்லவில்லை.
தொடர்ந்து மும்பை அணிக்கு விளையாடி வருகிறார். சர்பிராஸ் உடல் தகுதியுடன் இருப்பதால் ரஞ்சி கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடி வருகிறார். மும்பை அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருக்கிறார். இப்படி அனைத்து போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடும் போது எப்படி நீங்கள் வாய்ப்பு வழங்காமல் இருப்பீர்கள்.
நீங்கள் 15 வீரரை ஒரு அணிக்காக தேர்வு செய்கிறீர்கள் என்றால் அவர் அனைவரும் வித்தியாசமானவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களை வழிநடத்துவது அணியின் பொறுப்பாகும். சிறந்த வீரர்களை நீங்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அதுதான் தேர்வு குழு உறுப்பினரின் பொறுப்பு. அந்த வீரரை வழிநடத்துவது அணி நிர்வாகத்தின் பொறுப்பு.நிலைமை இப்படி இருக்கும் போது இது போன்ற கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.