வேற்று மாநிலத்தை சேர்ந்த 8 பேர் புதுவை கிரிக்கெட் அணியில்.. வெளியே அனுப்பிய பிசிசிஐ
மும்பை : இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் இந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது.
அதில் பங்கேற்றுள்ள புதுச்சேரி மாநில கிரிக்கெட் அணியில் பல வெளி மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் என புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த பிசிசிஐ, விசாரணைக்குப் பின் எட்டு வீரர்களை அணியில் இருந்து நீக்கி உள்ளது. இதனால், புதுச்சேரி கிரிக்கெட் அணியில் செய்த பித்தலாட்டம் உறுதி ஆகி உள்ளது.
மாநில கிரிக்கெட் அணியில் சேர சில விதிமுறைகள் உள்ளன. ஒருவர் குறிப்பிட்ட காலம் அந்த மாநிலத்தில் படித்தோ, வேலை செய்தோ இருக்க வேண்டும். அதற்கான முகவரி சான்றிதழ், பள்ளி, கல்லூரி அல்லது அலுவலக சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் எல்லாம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் பெயரை வைத்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு முழுவதும் வேற்று மாநில வீரர்கள் இடம் பிடித்து இருந்தனர். இதனால், கொதிப்பான உள்ளூர் வீரர்கள் மற்றும் இதர கிரிக்கெட் ஆர்வலர்கள், பிசிசிஐ-க்கு புகார் மேல் புகார் அளித்துள்ளார்கள்.
இந்த விவகாரத்தை விசாரித்த பிசிசிஐ, புதுச்சேரி அணியில் எட்டு பேர் வரை போலியான சான்றிதழ், அல்லது வெறும் ஒரு மாதம் மட்டுமே புதுவையில் இருந்ததற்கான ஆதாரம் அளித்துள்ளனர் என கண்டுபிடித்துள்ளது. பிறப்பு சான்றிதழ், வேலை சான்றிதழ் ஆகியவற்றில் பல போலி என தெரிய வந்துள்ளது.
இவர்களில் எட்டு வீரர்கள் ஆகஸ்ட் 2018இல் இருந்து தான் புதுச்சேரியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஒப்புக் கொள்ள முடியாது என கூறி பிசிசிஐ அவர்களை அணியில் இருந்து நீக்கி உள்ளது. அதில் ஒருவர் ஆகஸ்ட் 27 அன்று முதல் புதுச்சேரியில் இருப்பதற்கான முகவரி சான்றிதழ் அளித்து மாநில அணியில் சேர்ந்துள்ளார்.
விஜய் ஹசாரே போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதனால், அணியில் புதிதாக எட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இரவோடு இரவாக, புதுச்சேரி அணியில் ஏழு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த விஷயத்தை பிசிசிஐ அப்படியே விட்டு விடுமா அல்லது போலி சான்று கொடுத்தது, விதிமுறைகள் படி தகுதி இல்லாத வீரர்களை அணியில் சேர்த்தது ஆகியவற்றை பற்றி விசாரிக்குமா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications