என்ன நடந்தது?
கர்நாடகா கிரிக்கெட் அமைப்புக்கு சொந்தமான ஆளுர் மைதானத்தில் இந்தியா "ஏ" மற்றும் ஆஸ்திரலியா "ஏ" அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த போட்டியில் பங்கேற்ற வீரர்களின் மதிய உணவு பெங்களூர் மத்தியில் இருக்கும் ரிட்ஸ் கார்ல்டன் உணவகத்தில் இருந்து வர வேண்டும்.
பெங்களூர் டிராபிக்
பெங்களூரில் பொதுவாகவே கடும் டிராபிக் இருக்கும். அன்றும் வழக்கம் போல டிராபிக் இருக்க, உணவு எடுத்து வரும் வாகனம் அதில் மாட்டிக் கொண்டது. அதனால், உணவு சரியான நேரத்துக்கு மைதானத்துக்கு வந்து சேரவில்லை.
இடைவேளை இல்லாமல் போட்டி
வேறு வழியில்லாத நிலையில், போட்டி அதிகாரிகள் உணவு இடைவேளை நேரத்திலும், வீரர்களை போட்டியை தொடர வைத்துள்ளனர். சாப்பாடு வரவில்லை என்ற காரணத்திற்காக போட்டி நேரத்தை மாற்றி அவமானத்தை சந்தித்துள்ளது பிசிசிஐ. கர்நாடகா கிரிக்கெட் அமைப்பு இந்த விவகாரத்தில் எல்லாமே பிசிசிஐ செய்த குழப்பம் என சொல்லிவிட்டது. வீரர்களுக்கு உணவு அளிக்க வேண்டிய வேலை பிசிசிஐ உடையது என கூறியுள்ளது.
பிசிசிஐ பதில்
எதற்காக ஊர் எல்லையில் இருக்கும் ஒரு மைதானத்திற்கு பெங்களூர் மையத்தில் இருக்கும் உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்கிறார்கள் என்பது தான் பொதுவான கேள்வியாக உள்ளது. இதற்கு பதில் அளித்த பிசிசிஐ மேலாளர் சபா கரீம், "இது சர்வதேச போட்டி. வீரர்களுக்கு சிறந்த வசதிகளை அளிக்க வேண்டியது எங்கள் கடமை. என் உதவியாளர்களிடம் இருந்து அறிக்கை வருவதற்காக காத்திருக்கிறேன். எனினும், அதிகாரிகள் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்துள்ளார்கள்" என கூறினார்.