லக்னோ: லக்னோ அணிக்கான புதிய இளம் வீரர்களை கண்டறியும் ஸ்ட்ராடிஜிக் ஆலோசகராக பிசிசிஐ தேர்வுக் குழு முன்னாள் தலைவர் எம்எஸ்கெ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் லக்னோ அணியை சஞ்சீவ் கொயங்கா ரூ.7,090 கோடிக்கு வாங்கினார். இவர் ஏற்கனவே ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வாங்கி இருந்தார். இந்த அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

லக்னோ அணி ஆடிய இரு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்குள் கால் பதித்து அசத்தியது. இருப்பினும் கோப்பையை வெல்ல முடியாததால் லக்னோ அணி பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் லக்னோ அணி தரப்பில் பிசிசிஐ தேர்வுக் குழு முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் புதிய திறமையான வீரர்களை கண்டறியவும், வீரர்களின் திறனை மேம்படுத்தும் குழுவின் தலைவராக எம்எஸ்கே பிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் லக்னோ அணிக்கு புதிய இளம் வீரர்கள் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கனவே மார்னே மார்கல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸும் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் உள்ளார். இவர்களுடன் அடுத்த சீசனில் ஜஸ்டின் லாங்கர் மற்றும் எம்எஸ்கே பிரசாத் ஆகியோர் இணைய உள்ளனர். இதனால் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணியின் செயல்பாடுகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏனென்றால் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத்திற்கு அனுபவம் இருப்பதால், நாடு முழுவதும் உள்ளூர் கிரிக்கெட்டை கண்காணித்து புதிய வீரர்களை லக்னோ அணிக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.