அஹமதாபாத் : 2023 உலகக்கோப்பை தொடரை பிரம்மாண்டமாக நடத்த நினைத்த பிசிசிஐ-க்கு முதல் போட்டியிலேயே பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டி முதல் போட்டி என்பதால் பெரிய மைதானத்தில் நடத்த வேண்டும் என உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் மைதானத்தில் போட்டி நடந்தது.
சுமார் 1,34,000 ரசிகர்கள் அமரக் கூடிய அந்த மைதானத்தில் போட்டி நடந்த அன்று 20,000 பேர் கூட இல்லை. பெரிய காலி மைதானத்தில் போட்டி நடந்தது என்ற பெருமையை தவிர வேறு எந்த பிரம்மாண்ட பெருமையும் பிசிசிஐக்கு கிடைக்கவில்லை.

அந்த முதல் போட்டிக்கே ரசிகர்கள் பெரிய அளவில் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்த பிசிசிஐ, சுமார் 40,000 டிக்கெட்களை அருகில் இருந்த பெண்கள் குழுவிற்கு அளித்து பெண்களை அழைத்து வர ஏற்பாடு செய்தது.
இலவச டிக்கெட் மட்டுமில்லாமல், அவர்களுக்கு இலவச டீ மற்றும் தின்பண்டங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதில் பலர் மைதானத்துக்கே வரவில்லை.
பிசிசிஐ இந்த முடிவை எடுக்க காரணம் மற்ற அணிகளிடம் இருந்து அவமானத்தை மறைக்கத் தான் என கூறப்படுகிறது. டிக்கெட் விற்பனையின் போது அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் விற்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில், அது உண்மைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தன் மீதான தவறுகளை, விமர்சனங்களை மறைக்கவே பிசிசிஐ இலவச டிக்கெட்கள் கொடுக்க முயற்சி செய்துள்ளது. ஆனால், அதுவும் வேலை செய்யவில்லை. இரண்டாவது நாளில் பாகிஸ்தான் - நெதர்லாந்து போட்டியிலும் இதே நிலை தான். அங்கேயும் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன.
இன்னொரு விஷயமும் நடந்தது. இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி நடைபெறும் முன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடியாக உலகக்கோப்பை போட்டிகளை காண வரும் அனைத்து ரசிகர்களுக்கும் இலவச மினரல் வாட்டர் பாட்டில் கொடுக்கப்படும் என அறிவித்தார். அந்த முழு செய்தி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பிசிசிஐ ஆன்லைனில் டிக்கெட்களை விற்றது. புக்மைஷோ தளத்தில் டிக்கெட் விற்பனைக்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டுமின்றி எந்தப் போட்டிக்கும் டிக்கெட் இல்லை என்பது போலவே கூறப்பட்டது. அப்போதே ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என பொருமினர்.
ஆனால், பின் எப்படி மைதானம் காலியாக உள்ளது என்பதை பிசிசிஐ விளக்க வேண்டும். அதன்பின் இலவச டிக்கெட் கொடுப்பது பற்றி பிசிசிஐ யோசிக்கலாம்.