மும்பை : இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை நீக்குவது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
PTI செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள அந்த அதிகாரி, 2023 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டை நீக்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.
உலகக்கோப்பை தொடங்கும் முன்பே டிராவிட் நீக்கம் பற்றி பேச என்ன அவசியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிராவிட் விமர்சனம் : ரவி சாஸ்திரியின் நீக்கத்துக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் தேர்வு செய்யப்பட்ட போது பலரும் அதை வரவேற்றனர். ஆனால், அடுத்த சில மாதங்களில் அவரது சில முடிவுகளை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கி விட்டனர்.
டி20 உலகக்கோப்பை தோல்வி : கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி மூவரையும் ஒன்றாக பேட்டிங் ஆட வைத்தது விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதே போல, டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
2023 உலகக்கோப்பை தோல்வி : அடுத்ததாக 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால் ராகுல் டிராவிட் கடும் விமர்சனத்தை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், பிசிசிஐயிலும் இது குறித்து பேசத் துவங்கி உள்ளனர்.
ஒப்பந்தம் என்னவாகும்? : டிராவிட்டின் ஒப்பந்தம் 2023 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என கூறப்படுகிறது. அவராக விரும்பினால் கூட முழுமையான பயிற்சியாளர் ஒப்பந்தம் அவருக்கு கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.
வெற்றி பெற்றால்? : ஒருவேளை இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் ராகுல் டிராவிட் விமர்சனத்தில் இருந்து தப்பலாம். ஆனாலும், அவருக்கு இந்திய அணியின் முழுமையான பயிற்சியாளர் ஒப்பந்தம் கிடைக்காது.
டெஸ்ட் அணி மட்டும்? : இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் தனியாக அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வலம் வருகிறது. இந்திய அணி தோற்றால் யாரை பலியாடாக ஆக்குவது என்பதற்காகவே தற்போது டிராவிட் பெயரை வைத்து இது போன்ற செய்திகளை பிசிசிஐ கசிய விட்டு வருவதாக சந்தேகம் எழுகிறது. உலகக்கோப்பை தொடர் முடிவதற்குள் இன்னும் என்னென்ன சித்து வேலைகளை செய்யப் போகிறதோ பிசிசிஐ?