
இந்திய அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை அணியில் இருந்த அதே பேட்டிங் வரிசையை தான் டி20 உலகக்கோப்பையிலும் தேர்வு செய்துள்ளனர். ஆனால் இதில் கூடுதல் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய களத்தில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஸ்டைல் ஒத்துப்போகும் என்பதால் அவருக்கு ஆதரவு பெருகியது.

சஞ்சு சாம்சனின் நீக்கம்
ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் கடைசி நேரத்தில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார். அவரின் இடத்தில் இளம் வீரர் தீபக் ஹூடாவை சேர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் பிசிசிஐ பாரபட்சம் பார்ப்பதாக கூறி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

பிசிசிஐ-ன் விளக்கம்
இந்நிலையில் அதற்கான விளக்கத்தை பிசிசிஐ கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு அதிகாரி ஒருவர், சஞ்சு சாம்சன் ஒரு உலக தரமான வீரர் தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அணியின் காம்பினேஷன்களையும் நாம் பார்க்க வேண்டும். பேட்டிங்கில் ரோகித், கே.ல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், தினேஷ் கார்த்திக் என 5 வீரர்கள் மாற்றவே முடியாத பலத்தில் உள்ளனர்.

என்ன காரணம்
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 5 பேட்ஸ்மேன்களுக்கு மேல் கண்டிப்பாக பவுலிங்கும் செய்யக்கூடிய வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். ஆட்டத்தின் போது ஏதேனும் ஒரு பவுலருக்கு காயம் ஏற்பட்டால் சிக்கல் ஆகிவிடும். எனவே அவசரத்திற்கு தேவைப்பட்டால் யாரேனும் ஒரு வீரர் பவுலிங்கும் செய்ய வேண்டும். அப்படி பார்த்தால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடையாது.

தீபக் ஹூடா ஏன்?
தீபக் ஹூடா ஏற்கனவே தனது பேட்டிங் பலத்தை நீருபித்துவிட்டார். இதுவரை அவர் விளையாடியுள்ள 9 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 முறை 30+ ரன்களை அடித்துள்ளார். அவரின் ஸ்டரைக் ரேட்டும் 155.85 ஆக உள்ளது. தேவைப்பட்டால் பவுலிங்கிலும் அவர் பயன்படுவார் என்பதால் மட்டுமே தான் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஹூடா தேர்வானார் என கூறினார்.


Click it and Unblock the Notifications