பாகிஸ்தான் முயற்சி
அரசியல் காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவில்லை. எனவே இரு அணிகளுக்கு இடையே டி20 அல்லது ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்திவிட வேண்டும் என பாகிஸ்தான் வாரியம் பல முயற்சிகளை எடுத்தது. ஆனால் பிசிசிஐ அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த சூழலில் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
இங்கிலாந்து ஆஃபர்
அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில், "இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எந்தவித தொடர்களும் நடைபெறவில்லை. ஐசிசி தொடர்களில் மோதிக்கொள்ளும் போதிலும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே இரு தரப்பும் விருப்பப்பட்டால் இங்கிலாந்திற்கு வந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கலாம். இதற்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இங்கிலாந்து அணியுடன் பிசிசிஐ-க்கு நல்ல உறவு இருந்து வருகிறது. இந்திய அணிக்காக பல விஷயங்களில் இங்கிலாந்து விட்டுக்கொடுத்து சென்றுள்ளது. இதே போல தான் இங்கிலாந்து - பாகிஸ்தான் உறவும். எனவே அந்நாட்டு வாரியத்தின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு இரு நாடுகளும் சம்மதிக்கும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார் போல பாகிஸ்தானும் வரவேற்பதாக தகவல் வெளியானது.
பிசிசிஐ-ன் பதில்
இந்நிலையில் பிசிசிஐ அதற்கு தடாலடி பதில் கொடுத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முயற்சியை நாங்கள் மதிக்கின்றோம். எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே போட்டியை ஏற்பாடு செய்வது சாத்தியமற்ற ஒன்று. இங்கிலாந்து வாரியத்தின் முடிவு குறித்து பரிசீலனை கூட செய்யப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.