மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பிசிசிஐ பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் பிசிசிஐ யின் முடிவு ஒன்றுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதாவது டிஜிட்டல் இந்தியா என மத்திய அரசு அனைத்தையும் மாற்றி வரும் நிலையில், உலககோப்பைக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றாலும் ஒரிஜினல் டிக்கெட்டை நேரில் தான் வந்து பெற வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி இருந்தது.

இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் டிக்கெட்டை வாங்குவதற்காக தாங்கள் இரண்டு நாட்கள் முன்பே வந்து ஒரு ஊரில் தங்க முடியுமா என்றும் வெவ்வேறு ஊர்களில் போட்டிகளை பார்க்க செல்லும் போது இது சாத்தியமா என்ற கேள்வி எழுப்பினர். மேலும் பிசிசிஐ இன் இந்த முடிவு முட்டாள்தனமானது என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இதற்கு ஒரு மாற்று முடிவை பிசிசிஐ செய்துள்ளது. டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதே அதன் ஒரிஜினல் டிக்கெட்டை நாம் வீட்டிலே பெற்றுக் கொள்ள ஒரு வழிவகை செய்துள்ளது. அதன்படி டிக்கெட் ரிசர்வ் செய்யும் போது கூடுதலாக 140 ரூபாய் கொடுத்தால் ஒரிஜினல் டிக்கெட்டை வீட்டிற்கு கொரியர் மூலம் அனுப்ப பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி ரசிகர்கள் வெவ்வேறு இடத்திற்கு சென்று டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.மேலும் இந்த கொரியர் சேவை இந்தியாவில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் வெளிநாடுகளில் இருந்து டிக்கெட்கள் புக் செய்பவர்களுக்கு பொருந்தாது என்றும் பி சி சி ஐ விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்தியாவிலிருந்து டிக்கெட் புக் செய்தாலும் குறைந்தபட்சம் போட்டி தொடங்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டுகளை புக் செய்தால் மட்டுமே கொரியர் சேவை வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனினும் வெளிநாட்டில் இருந்து வரும் ரசிகர்கள் பாவம் என்பதால் டிஜிட்டல் டிக்கெட்டுகளை அனுமதிக்க பிசிசிஐ ஏற்பாடு செய்வதை இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.