டி20 உலககோப்பை தோல்வி.. வெளியே செல்லும் டிராவிட்? உள்ளே வருகிறார் விவிஎஸ் லட்சுமணன்..பிசிசிஐ அதிரடி
அடிலெய்ட் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் தோல்வியை தழுவியதை அடுத்து, இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவிய போது பல அதிரடி மாற்றங்கள் நடந்தன.
முதல் ஆளாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதிவை விட்டு ராஜினாமா செய்தார். விராட் கோலி அந்த தொடருக்கு முன்பே தாம் டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக கூறியிருந்தார்.

மீண்டும் அதே நிலை
இந்த நிலையில் தான் ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாகவும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் அணிக்குள் வந்தனர். தற்போது மீண்டும் இந்திய அணி 2021 ஆம் ஆண்டு என்ன நிலையில் இருந்ததோ அதே நிலைக்கு சென்று விட்டதால், பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது. டி20 உலக கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக பிசிஐ கடந்த 12 மாதங்களில் பல்வேறு முயற்சிகளை செய்தது.

பிசிசிஐ விரக்தி
பல்வேறு t20 தொடர்களை நடத்தி இந்திய அணியை தயார் செய்தது. அதனை மீறியும் இந்திய அணி தோல்வியை தழுவியிருப்பது பிசிசிஐ நிர்வாகிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சாஹல், ஹர்சல் பட்டேல் , சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், முகமது சிராஜ் , ஆவேஷ் கான் போன்ற வீரர்களை டி20 தொடர்களில் பயன்படுத்திய இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் , கேப்டன் ரோகித் கூட்டணி டி20 உலக கோப்பைக்கு அவர்களை பரிசீலிக்காமல் சீனியர்களை வைத்து விளையாடியது.

தவறான முடிவு
இதேபோன்று தினேஷ் கார்த்திக் தான் எங்களுடைய அணியின் பினிஷர் என்று கூறி ரிஷப் பண்டை ஓரம் கட்டிய டிராவிட் - ரோஹித் கூட்டணி, அரை இறுதிக்கு முந்தைய போட்டியில் மீண்டும் தினேஷ் கார்த்திகை ஓரம் கட்டி விட்டு ரிஷப் பண்டை அழைத்து வந்தது மிக முட்டாள்தனமான காரியமாக கருதப்படுகிறது. இதனால் பிளேயிங் லெவன் குறித்து ஒரு குழப்பமான அணுகு முறையில் தான் இந்திய அணி இருந்தது என தெளிவாக தெரிகிறது.

பயிற்சியாளர் மாற்றம்
இந்த நிலையில் அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மீண்டும் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. மூன்று தொடர்கள் அடுத்தடுத்த ஆண்டுகள் நடைபெறுவதால் ராகுல் டிராவிட்டை டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு பயிற்சியாளராகவும், லட்சுமணனை டி20 போட்டிக்கு பயிற்சியாளராகவும் பயன்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

நியூசி தொடரில் அமல்
அதன்படி வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட்க்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பயிற்சியாளராக லட்சுமணன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு ஆண்டில் முழுமையான புதிய வீரர்களைக் கொண்டு டி20 அணியை உருவாக்கும் பணியை லட்சுமணனை வைத்து பி சி சி ஐ காய் நகர்த்துகிறது. இதனால் இங்கிலாந்து அணியில் முன்பு இருந்தது போல் இந்திய அணியிலும் டெஸ்ட் ஒருநாளுக்கு ஒரு பயிற்சியாளர், டி20க்கு ஒரு பயிற்சியாளர் என்ற பார்முலாவை இந்தியா பயன்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications