
கொரோனா வைரஸ் தாக்கம்
2020ஆம் ஆண்டின் துவக்கம் முதல் உலகில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது தொற்று நோய் என்பதால் மனிதர்கள் வெளியில் வராமல் வீட்டில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தடைபட்டுள்ளன.

முடங்கிய கிரிக்கெட் உலகம்
அதில் கிரிக்கெட் போட்டிகளும் அடங்கும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெறவில்லை. கிரிக்கெட் உலகின் பிரம்மாண்டமான தொடரான இந்தியாவின் 2020 ஐபிஎல் தொடரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அமைப்புகள் நஷ்டம்
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் பல கிரிக்கெட் அமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் பல நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகள் உள்ளன. இந்தியா, கிரிக்கெட், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளும் போட்டிகள் நடைபெறாததால் சில ஆயிரம் கோடி நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன.

நிறைய போட்டிகள் தேவை
எனவே, கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் போது அதிக போட்டிகளில் ஆட வேண்டிய கட்டாயத்தில் அனைத்து அணிகளும் உள்ளன. அந்த நிலையை சமாளித்து அதிக போட்டிகளில் ஆடி வருமானம் ஈட்ட பிசிசிஐ அதிரடி திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ திட்டம்
ஒரே நாளில் இந்தியா டெஸ்ட் போட்டிகளிலும், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் ஆடும். இப்படி செய்வதன் மூலம், அதிக போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க முடியும். வருமானமும் குறைந்த காலத்தில் அதிகமாக கிடைக்கும். இதன் மூலம், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என பிசிசிஐ திட்டம் தீட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.

இரண்டு அணிகள்
இந்த திட்டத்தை செயல்படுத்த இரு அணிகள் தயார் செய்யப்படும். டெஸ்ட் அணி ஒன்றும், டி20 மற்றும் ஒருநாள் அணி ஒன்றுமாக இரண்டு அணிகள் போட்டிகளில் பங்கேற்கும். ஆனால், இதில் கோலி, ரோஹித் சர்மா போன்ற சில முக்கிய வீரர்கள் ஏதேனும் ஒரு அணியில் மட்டுமே பங்கேற்க முடியும் நிலையும் ஏற்படும்.

எப்படி போட்டிகள் நடக்கும்?
காலையில் டெஸ்ட் போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். மாலை வேளையில் டி20 போட்டி ஒளிபரப்பாகும். அதே போல, ஒரு டெஸ்ட் போட்டி முடிந்து டெஸ்ட் அணி வீரர்கள் ஓய்வு பெறும் போது, டி20 அணி அல்லது ஒருநாள் அணி அந்த இடைவெளியில் மற்றொரு தொடரில் பங்கேற்கும்.

முன்பே நடந்துள்ளது
சரி இது எப்படி சாத்தியம்? எனக் கேட்டால், இது போல ஆஸ்திரேலிய அணி 2017இல் செய்துள்ளது. ஆம், அப்போது இந்தியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க வந்தது. அப்போது ஆஸ்திரேலியாவில் ஆரோன் பின்ச் தலைமையில் ஒரு அணி டி20 தொடரில் ஆடியது.

ரசிகர்கள் நிலை
இதில் ரசிகர்கள் நிலை தான் பாவம். கடந்த இரு ஆண்டுகளாகவே அளவுக்கு அதிகமான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டு போட்டிகள் என்பதெல்லாம் "ரொம்ப ஓவர்".


Click it and Unblock the Notifications