ரத்து செய்ய எண்ணமில்லை
ஐபிஎல் 2021 தொடர் தற்போது இந்தியாவின் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடரை ரத்து செய்வது குறித்த எண்ணமில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் பாதுகாப்பான சூழலில் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
டி20 உலக கோப்பை நடைபெறுமா?
இந்நிலையில் ஐபிஎல்லை அடுத்து இந்த ஆண்டில் இறுதியில் டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் ஐபிஎல்லை போலவே பல்வேறு நாடுகள் பங்கேற்று விளையாடும் சூழல் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா காரணமாக அந்த தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதிகரிக்கும் பாதிப்பு
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்றைய தினம் மட்டுமே கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 3,86,452 என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவானது என்றும் கணக்கில் எடுக்கப்படாத கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மாற்று இடம் குறித்து ஐசிசி
இந்நிலையில் இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடரை நடத்துவதே தங்களது எண்ணம் என்றும் ஆனால் மாற்று இடத்தையும் திட்டமிட்டு வருவதாகவும் இந்த மாத துவக்கத்தில் ஐசிசி தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த தகவலை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
யூஏஇயில் டி20 உலக கோப்பை
பிசிசிஐ ஜெனரல் மேனேஜர் திராஜ் மல்கோத்ரா அந்த மாற்று இடம் யூஏஇயாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு தொடர் நடத்தப்பட்டாலும் அதை பிசிசிஐயே நடத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆயினும் இதுகுறித்து தற்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கு கால அவகாசம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.