புதிய தேசிய தேர்வாளர்கள்
தேசிய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சரண்தீப் சிங் உள்ளிட்ட மற்ற 3 தேர்வாளர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை நீடிக்கிறது.
பிசிசிஐ அறிவிப்பு
இதனிடையே, இந்திய அணியின் இரு தேர்வாளர்கள், அண்டர் 19 அணியின் இரு தேர்வாளர்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது.
புதிய உறுப்பினர்கள் பொறுப்பு
இந்தியா மற்றும் இந்திய ஏ அணி, துலீப், தியோதர், சேலஞ்சர் தொடர்கள், இராணி கோப்பை உள்ளிட்ட தொடர்களுக்காக அணி வீரர்களை இந்த புதிய தேர்வாளர்கள் குழு தேர்ந்தெடுக்கும் என்று பிசிசிஐ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஆலோசனை குழு தேர்ந்தெடுக்கும்
தேர்வாளர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 24ம் தேதி கடைசி நாளாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய உறுப்பினர்களை மதன் லால், கவுதம் கம்பீர், சுலக்ஷனா நாயக் உள்ளிட்ட கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
64 வயதான வெங்சர்க்கார்
தலைமை தேர்வாளர் பதவிக்கு 64 வயதான முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்ற விதி உள்ளதால், அவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
7 டெஸ்ட் அல்லது 10 ஒருநாள் போட்டிகள்
தலைமை தேர்வாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள நபர் சர்வதேச அளவில் 7 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 30 முதல்தர போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 முதல்தர போட்டிகளை ஆடியிருக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.