டெல்லி: இந்திய ரசிகர்களால் ஒரு மதம்போல பார்க்கப்படும், கிரிக்கெட்டின் ஆன்மாவை இந்திய கிரிக்கெட் வாரியம் கொல்கிறது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் சூதாட்ட புகார் குறித்து பேசாமல் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் மவுனமாக இருப்பதை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.
வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் 2 நபர்களை கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழு மீது நம்பிக்கையில்லை என்று கூறி, பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா என்பவர், 2013ம் ஆண்டு ஜூன் மாதம் பாம்பே ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுமீது விசாரணை நடத்திய ஹைகோர்ட்டும், பிசிசிஐ விசாரணை குழு சட்ட விரோதமானது என்று அறிவித்தது. இதை எதிர்த்து பிசிசிஐ உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் அங்கும், பிசிசிஐக்கு எதிராகவே உத்தரவு வந்தது.
ஓய்வு பெற்ற ஹைகோர்ட்டு நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் விசாரணை கமிஷன் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி வகித்த சீனிவாசனை அந்த பதவியில் இருந்து விலகியிருக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சீனிவாசன் பதவி விலகினார். இதையடுத்து கவாஸ்கர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, முட்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை இம்மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. விசாரணை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து முட்கல் தெரிவிக்க மறுத்துவிட்டாலும், அதிலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசனின் மருமகனும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகியுமான, குருநாத் மெய்யப்பன், சூதாட்ட புக்கிகளிடம் பேசியதாக கூறப்படும் உரையாடல்கள் அடங்கிய சிடி ஆதாரம் அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா பெயரும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
ஐபிஎல் சூதாட்டம் பற்றிய முட்கல் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்பதால் பிசிசிஐ தலைவராக தன்னை பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் சீனிவாசன், உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அவரது மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் சீனிவாசனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
"பிசிசிஐ தலைவராக மட்டுமின்றி ஐபிஎல் அணி ஒன்றில் தலைவராகவும் உள்ள சீனிவாசன், இந்த விவகாரத்தில் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும். அவர் மவுனமாக இருப்பது ஏன்?
கிரிக்கெட்டை ஒரு மதம்போல இந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் பிசிசிஐ கிரிக்கெட்டின் ஆன்மாவை கொலை செய்து கொண்டுள்ளது. பிசிசிஐ வேறு, ஐபிஎல் வேறு என்று நீங்கள் கூறி தப்பித்துவிட முடியாது. பிசிசிஐயின் உற்பத்தி பொருள்தான் ஐபிஎல். ஐபிஎல் பிரச்சினையின்போது பிசிசிஐ தலைவர் வாய் மூடி மவுனமாக இருந்தது ஏன்? என்று சரமாரியான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.