கொல்கத்தா: நவ.12ஆம் தேதி கொல்கத்தா காளி பூஜை திருவிழா நடக்கவுள்ளதால், அன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ள பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூன் 27ஆம் தேதி பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் அக்.15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அக.15ஆம் தேதி நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் என்பதால், அன்றைய நாளில் அகமதாபாத்தில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் அக்.14ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது.
அதேபோல் அக்.12ஆம் தேதி ஐதராபாத் மைதானத்தில் நடக்கவிருந்த பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்.10ஆம் தேதிக்கு மாற்றப்படவுள்ளது. ஏற்கனவே இரு போட்டிகளை மாற்றம் செய்து பிசிசிஐ அறிவிக்க உள்ள நிலையில், மூன்றாவது முறையாக அட்டவணையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வரும் நவ.12ஆம் தேதி மேற்கு வங்கத்தில் காளி பூஜை திருவிழா கொண்டாடப்படவுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டம் என்பதால், அன்றைய நாளில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்திற்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-யிடம் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள 2 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், 3வது முறையாக மாற்றம் செய்யப்படவுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக உலகக்கோப்பை அட்டவணையை தயாரித்த குழுவினர் என்ன செய்தார்கள் என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.