மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில், பிசிசிஐ தேவையில்லாத பரிசோதனை முயற்சிகளை செய்வதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை ஜூன் 30ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், மீண்டும் சூப்பர் 8 சுற்றின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு அணிகள் தேர்வு செய்யப்படவுள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பல்வேறு அணிகளும் இப்போதே தயாராக தொடங்கிவிட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஆன்ட்ரே ரஸல் சில ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணிற்கு ஏற்ப வீரர்களை இப்போதே பரிசோதனை செய்ய தொடங்கிவிட்டது.
ஆனால் பிசிசிஐ தரப்பில் இதுவரை எந்த முடிவையும் முழுமையாக எடுக்காமல் இந்திய அணியையும், ரசிகர்களையும் குழப்பி வருகிறது. இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வரும் சூழலில், திடீரென ரோகித் சர்மாவை பற்றி முடிவெடுக்க ஐபிஎல் தொடர் வரை காத்திருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஒருவேளை ஐபிஎல் தொடரில் விராட் கோலி, ரோகித் இருவரும் சிறப்பாக விளையாடினால், பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு எப்படி இருக்கும் என்பதே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைக்க பிசிசிஐ கைகளில் 5 போட்டிகள் மட்டுமே உள்ளது. அதன்பின் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் பிஸியாகி விடுவார்கள். இதனால் உலகக்கோப்பை தொடருக்கு எப்படி இந்திய அணி தயார் செய்யப்பட்டதோ, அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடருக்கும் தயார் செய்யப்பட வேண்டும்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஐபிஎல் தொடரின் பங்கு முக்கியத்துவம் வகித்தாலும், முழுமையாக ஐபிஎல் தொடரை மட்டுமே வைத்து பிசிசிஐ தரப்பில் முடிவுகள் எடுக்கப்போவதில்லை. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் திடீரென சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டால் அவர்களை பிசிசிஐ நிர்வாகம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. இதனால் எந்த ரிஸ்கும் எடுக்காமல் சீனியர் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பிசிசிஐ விரைவுபடுத்த வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.