பாலக்கலே: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதற்கு பிசிசிஐ தான் காரணம் என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 48.5 ஓவர்களில் 266 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் முதல் பேட்டிங் முடிவடைந்த போது தொடங்கிய மழை, இரவு 10 மணியாகியும் நின்றபாடில்லை. காத்திருந்த நடுவர்கள் இறுதியாக 9.50 மணிக்கு இரு அணி கேப்டன்களுடன் ஆலோசனை நடத்தி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முழுமையாக நடக்காததால், ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். வழக்கமாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்படாது. மழை பொழிவு அதிகமிருக்கும் என்பதால், இலங்கை அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும். இந்த காலக்கட்டத்தில் பாலக்கலே மைதானத்தில் நடைபெற்ற 33 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டுமே முழுமையாக நடைபெற்று முடிவை எட்டியுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்தே பிசிசிஐ இலங்கையில் ஆசியக் கோப்பையை நடத்த பிடிவாதம் பிடித்துள்ளது. இந்தப் போட்டி மட்டுமல்லாமல் இந்திய அணி நாளை நேபாளம் அணியுடன் விளையாடும் போட்டிக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகளுக்கும் மழை எச்சரிக்கை உள்ளது.
ஒருவேளை சூப்பர் 4 போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டால், ஆசியக் கோப்பைத் தொடரே மொத்தமாக பாதிக்கப்படும். இதனால் ஐசிசி தொடர்களுக்கு இந்தியா வரும் பாகிஸ்தான் அணியை போல், பாகிஸ்தானுக்கும் இந்திய அணியை ஐசிசி தொடர்களில் அனுப்பும் வழக்கத்தை பிசிசிஐ ஆலோசிக்க வேண்டும் என்று ரசிகர்களிடையே குரல்கள் எழுந்துள்ளன. இல்லையென்றால் விளையாட்டின் நோக்கமே கெட்டுவிடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.