சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளின் முடிவில் இரண்டு தோல்விகளையும், ஒரு டிராவையும் செய்து இருந்தது. இந்த மோசமான செயல்பாட்டுக்கு பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தான் காரணம் என பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அதே சமயம் பிசிசிஐயின் தேர்வு குழுவும் இதற்கு முக்கிய காரணம் என்பது தெரிய புஜாராவை அணியிலக் சேர்க்க மறுத்ததன் மூலம் தெரிய வந்தது. இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான புஜாராவை அணியில் சேர்க்க வேண்டும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வின் போது கேட்டு இருக்கிறார்.

அதை அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக் குழு மறுத்து இருக்கிறது. அணியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படாது எனவும், இனி இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அவர்கள் திட்டவட்டமாக கூறி இருக்கின்றனர். புஜாராவுக்கு மாற்றாக இந்திய அணியில் இடம் பெற்ற சுப்மன் கில் இதுவரை டெஸ்ட் அணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை.
இந்த நிலையில், இந்திய அணியின் மோசமான செயல்பாட்டுக்கு தேர்வுக் குழுவும் ஒரு முக்கிய காரணம்தான். புஜாரா மட்டுமன்றி அஜின்க்யா ரஹானேவையும் தேர்வுக் குழு ஒதுக்கி வைத்துள்ளது. அதேபோல ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளில் இருந்து யுஸ்வேந்திர சாஹல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற சில வீரர்களையும் ஒதுக்கி வைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மூவரும் இந்திய அணிக்காக தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தவர்கள் தான். ஆனால், அவர்களுக்கு சமீப காலமாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இப்படி அணித் தேர்வில் சிறந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பிசிசிஐ எதிர்பார்ப்பது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.