டெல்லி: அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா அவுட்டானதற்கு கேப்டன் டோணி அவுட்டாகிவிட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ட்வீட் போட்டு பலரின் மனதில் இடியை இறக்கியது.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சிட்னி நகரில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் எடுத்துள்ளது.

கோஹ்லி, தவான் என்று வலுவான பேட்ஸ்மேன்களை இந்திய அணி அடுத்தடுத்து இழந்துவிட்டது. இந்நிலையில் கேப்டன் டோணி தான் நின்று நிதானமாக ஆடி அணியின் ரன்களை அதிகரித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் 41.5வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட்டானார். இந்த போட்டி குறித்து லைவாக ட்வீட் செய்து வரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) ஜடேஜாவுக்கு பதில் டோணி அவுட்டாகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்தது.
டிவியை பார்க்காத பலர் பிசிசிஐ போட்ட ட்வீட்டை பார்த்து தலையில் கையை வைத்து இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டனர். பிறகு தான் அவுட்டானது டோணி அல்ல ஜடேஜா என்று தெரிந்து ரசிகர்கள் தெளிவு அடைந்தனர்.
பிசிசிஐ எந்த நேரம் தவறாக ட்வீட் போட்டதோ சற்று நேரத்தில் நிஜமாகவே டோணி ரன் அவுட்டாகிவிட்டார்.