கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கொண்டே 'ஆதாயம்' அடையும் வகையில் கிரிக்கெட் சார்ந்த நிறுவனங்களிலும் பங்குதாரராக இருப்பது குறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் டோணிக்கு எதிராக புதியதாக எந்த ஒருவ் விசாரணையும் நடத்தவில்லை என்று கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டால்மியா விளக்கம் அளித்துள்ளார்.
டோணியின் நண்பரான அருண் பாண்டே, ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் டோணி, ரெய்னா, ஜடேஜா ஆகிய வீரர்களின் விளம்பர ஒப்பந்தங்களை நிர்வகித்து வருகிறது.

அத்துடன் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வர்த்தக நடவடிக்கைகளையும் ரித்தி ஸ்போர்ட்ஸ் கவனித்து கொள்கிறது. இந்த ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் டோணிக்கு 15% பங்குகள் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அருண் பாண்டேவுடன் சேர்ந்து வேறு சில நிறுவனங்களிலும் டோணி பங்குதாரராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இப்படி கேப்டன் பொறுப்பில் இருந்து கொண்டு வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு டோணி இரட்டை ஆதாயம் அடைந்து வருகிறார் என்பது முன்னரே வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்பான சர்ச்சைகள் வெடிப்பதும் ஓய்வதுமாக தொடர்கிறது.
இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தி விதிகளுக்கு முரணாக இரட்டை ஆதாயம் அடையும் வகையில் டோணி செயல்படுவது குறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்து விசாரணை நடைபெறுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
இக்குழுவானது கிரிக்கெட் வாரியத் தலைவர் டால்மியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இத்தகவல்களை டால்மியா மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், டோணி பற்றி வெளியான தகவல் தவறானது. இது கவலை அளிப்பதாகும். அஜீத் சண்டிலியாவுக்கு எதிராகத்தான் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணை நடைபெற்று வருவதாக நான் தெரிவித்து இருந்தேன்.
இது குறித்து கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவித்தேன். 2013ம் ஆண்டு ஜூலை மாதம் எனது தலைமையில் கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது அனைத்து வீரர்களும் ஆதாயம் தரும் நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தால் அதுபற்றிய விவரங்கலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் வீரர்களின் இரட்டை ஆதாயம் தொடர்பாக எந்த ஒரு புதிய விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.