கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இம்மாதம் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் 2020 தொடர் அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முன்னதாக ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அதன் தலைவர் சவுரவ் கங்குலி கூறியிருந்தார். ஆனால் இதற்கு பலதரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது, மக்களின் உயிருடன் பிசிசிஐ விளையாடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
குறைவான போட்டிகள்
ஐபிஎல் 2020 தொடரில் மொத்தம் 60 போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஏப்ரல் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டிகள் குறைக்கப்படும் என்று பிசிசிஐ கடந்த வாரத்தில் அறிவித்திருந்து. இந்நிலையில், இந்தத் தொடரை ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டு, அதற்கான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் இதில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டில் திட்டமிடப்படும்
இந்நிலையில் போட்டிகளை குறைக்காமல், தொடரை ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் கடந்த 2009ல் நடத்தப்பட்டது போல வெளிநாடுகளில் நடத்தவும் திட்டமிடப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ திட்டம்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிசிசிஐ, அவ்வாறு இல்லாதநிலையில், ஐபிஎல்லின் பாதி போட்டிகளை இந்தியாவிலும் மீதி போட்டிகளை வெளிநாடுகளிலும் நடத்தவும் திட்டமிடப்படும் என்றும் கூறியுள்ளது. அல்லது மேற்குறிப்பிட்டபடி மொத்த தொடரையுமே வெளிநாடுகளிலேயே நடத்தவும் திட்டமிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல வெளிநாட்டு வீரர்கள் இல்லாவிட்டால் இருக்கும் வீரர்களை கொண்டே நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.