மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் நோக்கில், முன்னாள் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோரை சிறப்புப் பயிற்சி முகாம்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் கிரிக்கெட் சிறப்பு மையத்தில் இந்த சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த மையத்தின் தலைவராக உள்ள விவிஎஸ் லட்சுமணன், இந்திய அணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த மூத்த வீரர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். 4 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும் இந்த முகாம்களில், இளம் பந்துவீச்சாளர்களுக்கு இவர்கள் தங்களது அனுபவங்களைக் கற்றுக்கொடுக்க உள்ளனர்.

உள்ளூர் போட்டிகள், வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் மற்றும் இந்திய ஏ அணி ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு, எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ள இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியைத் தொடங்கிய ஜாகீர் கான்
இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் ஏற்கனவே பெங்களூரு சென்று தனது பணியைத் தொடங்கிவிட்டார். இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்காக 5 நாட்கள் நடைபெறும் சிறப்புப் பயிற்சி முகாமை அவர் தற்போது நேரில் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
ஜாகீர் கானைத் தொடர்ந்து, சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் இந்தப் பயிற்சி முகாம்களில் இணையவுள்ளனர். ஹர்பஜன் சிங் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கான முகாமை நடத்தவுள்ளார். அதற்கான தேதிகளை அவர் தற்போது பிசிசிஐ நிர்வாகத்துடன் இணைந்து இறுதி செய்து வருகிறார்.
அதேபோல, இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளரான அனில் கும்ப்ளே, லெக் ஸ்பின் எனப்படும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கான முகாமை நடத்தவுள்ளார்.

இது குறித்துப் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், "விவிஎஸ் லட்சுமணன் தான் இந்த மூவரையும் தொடர்புகொண்டு சிறப்புப் பயிற்சி முகாம்களை நடத்த அழைப்பு விடுத்தார். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஜாம்பவான்கள் தங்களது அனுபவங்களை அடுத்த தலைமுறை வீரர்களுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பாகும். ஹர்பஜன் சிங் தனது தேதிகளை இறுதி செய்யும் பணியில் உள்ளார்" என்று தெரிவித்தார். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த சிறப்புப் பயிற்சி முகாம்கள் அனைத்தும் நடந்து முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் வீரர்களைப் பயிற்சி முகாம்களுக்கு அழைப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு ஜக்மோகன் டால்மியா பிசிசிஐ தலைவராக இருந்த காலத்திலும் சந்து போர்டே, எரபள்ளி பிரசன்னா, சையத் கிர்மானி போன்ற முன்னாள் வீரர்கள் இளம் கிரிக்கெட் வீரர்களுக்குத் தங்களது நிபுணத்துவத்தைக் கற்றுக்கொடுத்துள்ளனர். தற்போது அந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பெங்களூரு கிரிக்கெட் சிறப்பு மையத்தின் முழுநேர வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர்களான விஆர்வி சிங் மற்றும் ஸ்ரீநாத் அரவிந்த் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். டிராய் கூலி தனது 60வது வயதை எட்டியதால் பதவி விலகியதை அடுத்து, புதிய வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது. தற்போது சுழற்பந்து வீச்சுப் பிரிவை முன்னாள் வீரர் சுனில் ஜோஷி கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.