மும்பை : இந்திய அணியில் எதிர்பாராத மாற்றம் நடக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சையில் இருக்கிறார். அவர் அதில் இருந்து குணமடைந்தாலும், மீண்டும் அணிக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

அவர் மீண்டும் அணிக்கு திரும்புவதற்குள் இந்தியா பாதி உலகக்கோப்பை லீக் போட்டிகளில் ஆட வேண்டிய நிலை உள்ளது.
தற்போது தற்காலிகமாக இஷான் கிஷன் துவக்க வீரராக ஆடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் உதல் உலகக்கோப்பை போட்டியில் அவர் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் சுப்மன் கில் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது 10 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. அதன் பின்னரும் அவரால் முழு உடற்தகுதி பெற முடியுமா? என்பதை உறுதியாக கூற முடியாது.
மறுபக்கம், மாற்று வீரர் இஷான் கிஷன் டக் அவுட் ஆகி இருக்கிறார். அவர் இதே போல அடுத்து வரும் போட்டிகளிலும் ஆடினால் அது இந்திய அணிக்கு சிக்கல். முன்பு இஷான் கிஷன் இந்திய அணிக்காக துவக்க வீரராக சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறார்.
ஆனாலும், உலகக்கோப்பையில் அவரை நம்பி மோசம் போக முடியாது. அதனால், பிசிசிஐ அதிரடியாக சுப்மன் கில்லை ஏன் தொடரில் இருந்து நீக்கக் கூடாது என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது.
உலகக்கோப்பை தொடரை நடத்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி, தொடர் துவங்கும் முன் அறிவிக்கப்பட்ட 15 வீரர்கள் கொண்ட அணியில் இருந்து ஒரு வீரரை நீக்க வேண்டும் என்றால் அவர் போட்டியில் ஆட முடியாத அளவுக்கு காயமோ, உடல்நலப் பிரச்சனைகளோ அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய தனிப்பட்ட காரணங்களோ இருக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் அந்த வீரரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதில் மாற்று வீரரை அணியில் சேர்க்க முடியாது. தற்போது சுப்மன் கில் உடல்நலம் குன்றி இருப்பதால், இதை காரணம் காட்டி பிசிசிஐ அவரை எளிதில் நீக்கி விட முடியும். மாற்று துவக்க வீரரையும் தேர்வு செய்ய முடியும். அதன் காரணமாகவே இந்த ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது பிசிசிஐ.
ஒருவேளை சுப்மன் கில் காய்ச்சலில் இருந்து மீண்டு பின்னர் அவரால் போட்டியில் ஆட முடியாத நிலை இருந்தால், அப்போது பிசிசிஐ அவரை நீக்க முடியாது. அந்த சிக்கல் வராமல் இருக்கவே, இப்போதே பிசிசிஐ அவரை நீக்கலாமா என்ற பேச்சை துவங்கி உள்ளது.