நிதி முறைகேடு.... பி.சி.சி.ஐ.ல் இருந்து சீனிவாசனுக்கு 'கல்தா'? ஐ.சி.சி. தலைவர் பதவியும் 'அம்போ'?
சென்னை: நிதி முறைகேடு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என். சீனிவாசனை நீக்குவதற்காக ஒரு அணி தீவிரமாக களமிறங்கியுள்ளது. அப்படி சீனிவாசன் நீக்கப்பட்டால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியையும் பறிகொடுக்கக்க நேரிடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்பனை செய்த வகையில் என். சீனிவாசன் பி.சி.சி.ஐ-க்கு பல கோடி ரூபாயை செலுத்தாமல் ஏமாற்றினார் என்கிற குற்றச்சாட்டு முதலில் வைக்கப்பட்டது. இது குறித்து பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு சட்ட ஆலோசனை பெறவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன், சூதாட்ட புரோக்கர் கரன் கில்கோத்ராவை பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாகூர் சந்தித்து பேசியது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார்.

சீனி குடும்பம் மீது பாய்ந்த தாகூர்
இந்த குற்றச்சாட்டை அனுராக் தாகூர் முற்றாக மறுத்தார். அதோடு தனக்கு கரனை பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்றும், சீனிவாசன் குடும்பத்தில்தான் சூதாட்டக்காரர்களோடு தொடர்புடையவர்கள் இருக்கின்றனர் என்றும் ஆவேசப்பட்டார்.

சீனி ஆதரவாளருக்கு ஆப்பு
இந்த நிலையில்தான் பி.சி.சி.ஐ.-யின் முன்னாள் செயலாளர் சஞ்சய் படேல் நிதி முறைகேடு குற்றச்சாட்டின்பேரில் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் சீனிவாசனின் தீவிர ஆதரவாளர்.

ஏன் நீக்கம்?
பரோடா கிரிக்கெட் மைதானத்தில் டிரெஸ்சிங் அறையை மாற்றியமைக்க ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் செலவுத் தொகை 60 லட்ச ரூபாய் ஆனது. இதற்கு உரிய அனுமதியை வாங்காமல் நிதியை முறைகேடாக கையாண்டதாக சஞ்சய் படேல் நீக்கப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து அருண் காந்தி, சச்சின் டால்வி ஆகியோரும் உறுப்பினர் பதவியை இழந்தனர். இந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் அடங்கிய கமிட்டி விசாரணை செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனிவாசனையும் கழற்றிவிட தீவிரம்
இதேபோல் பி.சி.சி.ஐ- யின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சீனிவாசனையும் நீக்கிவிட அவருக்கு எதிரான கோஷ்டி மும்முரம் காட்டி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விற்பனை செய்த விவகாரத்தில் சீனிவாசனுக்கு சிக்கல் இருப்பதாகவே கூறப்படுகிறது.
அப்படி பி.சி.சி.ஐ. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் தானாகவே ஐ.சி.சி. தலைவர் பதவியை சீனிவாசன் இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications