
ஜாலி ஹாலிடே
அனைவரும் ரிஷப் பண்ட்டுக்கு கோவிட் பற்றி பேசிக் கொண்டிருக்க, அதற்கு முக்கிய காரணம் என்னவென்று யோசித்தால், பயோ-பபுளில் செய்யப்பட்ட விதிகள் மாற்றம் தான். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன், இந்திய அணிக்கு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதாவது, 10 நாட்கள் ஜாலி ஹாலிடே கொடுக்கப்பட்டது எனலாம். இந்த நாட்களில் அவர்களுக்கு பயோ-பபுள் விதிமுறைகள் கிடையாது. இங்கிலாந்தில் அவர்கள் வரையறுக்கப்பட்ட எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் குடும்பத்துடன் செல்லலாம்.

கொரோனா உறுதி
இந்த நிலையில் தான், கல்யாணம், குடும்பம் குட்டி என்று எதுவுமில்லாத ரிஷப் பண்ட், யூரோ கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றார். தலையில் முக்காடு, குல்லா என்று என்னென்னவோ போட்டுச் சென்றும், அவரை இந்திய ரசிகர்கள் கண்டறிய, அவர்களுடனேயே உட்கார்ந்து ஜாலியாக மேட்ச் பார்த்திருக்கிறார். இந்த சூழலில் தான் இப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ரவி சாஸ்திரி கூட
இந்நிலையில், 10 நாட்கள் விடுமுறை கொடுத்தாலும், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாமே என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் ரிஷப் கால்பந்து போட்டியை காண சென்றதாக தெரிகிறது. ஆனால், இங்கு ரிஷப்பை மட்டும் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் சென்று பார்த்ததை இங்கு யாரும் மறுக்க முடியாது. அங்கும், கூட்டம் திரளாகவே இருந்தது. ஆனால், ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், ரவி சாஸ்திரி கோச், ஆனால் பண்ட் களத்தில் இறங்கி விளையாட வேண்டிய வீரர்.

எப்படி நடந்தது?
நிலைமை இப்படி இருக்க, ரிஷப் பண்ட் யூரோ கால்பந்து போட்டியை காண சென்றது குறித்து, பிசிசிஐ சார்பில், இங்கிலாந்தில் உள்ள இந்திய அணி நிர்வாகிகளிடம் விசாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீட்டிங்கில், கேப்டன் விராட் கோலியும் கலந்து கொண்டதாக தெரிகிறது. அதில், வீரர்களுக்கு கிளிப்பிள்ளை போல இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் எப்படி தவறு நடந்தது? என்று பல கேள்விகளை பிசிசிஐ அடுக்கியதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications