மேலும் தள்ளிப் போகுமா ஐபிஎல்?
இதையடுத்து தள்ளிப் போடப்பட்ட ஐபிஎல் தொடரை மேலும் தள்ளிப் போடும் யோசனையில் பிசிசிஐ இருக்கிறதாம். அதாவது ஆகஸ்ட் - செப்டம்பர் மாத வாக்கில் இந்தத் தொடரை நடத்தலாமா என்ற யோசனையில் உள்ளதாம் பிசிசிஐ. மேலும் இந்த தொடரை விரிவாக நடத்தாமல் சுருக்கமாக நடத்தவும் யோசித்து வருகிறார்களாம். அப்படி நடந்தால் இன்னொரு சிக்கலும் பிசிசிஐக்கு வரும். அதுதான் ஆசியா கோப்பை டி 20 தொடர்.
ஆசியா கோப்பையையும் தள்ளிப் போடணும்
ஆசியா கோப்பை டி20 தொடர் இதே கால கட்டத்தில் துபாயில் நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரை ஆகஸ்ட் - செப்டம்பரில் நடத்தினால் ஆசியா கோப்பை தொடரை நடத்த முடியாது. அதையும் தள்ளிப் போட்டாக வேண்டும். எனவே இது தொடர்பாகவும் தற்போது ஆலோசனை நடந்து வருகிறதாம். அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்திற்குள் ஏதாவது ஒரு வசதியான பகுதியில் போட்டிகளை நடத்தலாமா என்று யோசிக்கப்பட்டு வருகிறதாம்.
மே மாத கடைசிக்கு வாய்ப்புண்டா?
அதேசமயம் மே கடைசியில் தொடரை தொடங்கும் சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகிறார்களாம். இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், மே மாத கடைசியில் தொடங்கினால் கூட முழுத் தொடரை நடத்த முடியும். நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைப்படும் முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும். ஆகஸ்ட் - செப்டம்பர் குறித்து தற்போது யோசித்து வருகிறோம் என்றார்.
வெளிநாட்டு வீரர்கள் பாதிக்கப்படுவர்
இந்த வருட தொடர் ரத்து செய்யப்பட்டால் வெளிநாட்டு வீரர்கள் அதிக பாதிப்பை சந்திப்பார்கள். 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே போட்டி தள்ளிப் போயுள்ளதால் அவர்கள் அனைவருமே ஏமாற்றத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். ஆனால் கொரோனாவைரஸைத் தாண்டி போட்டியை நடத்த முடியாத சூழல் தற்போது நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.