டெல்லி: காசுக்குப் பஞ்சமே இல்லாத ஒரே அமைப்பு நம்ம பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம்தான். கொட்டிக் கிடக்கும் பணக் குவியலிலிருந்து தற்போது லேசாக ரெண்டு "நோட்டை" மட்டும் எடுத்து டெல்லியில் பிரமாண்டமான ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தைக் கட்டப் போகிறதாம் பிசிசிஐ.
டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களின்போது கடைசி நேரத்தில் ஸ்டேடியத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் கடுப்பாகிப் போனதால்தான் தற்போது புதிதாக ஒரு ஸ்டேடியத்தைக் கட்டும் முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளதாம்.

புதிய ஸ்டேடியத்திற்காக இடம் வாங்கி அங்கு அதைக் கட்டவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த கிரிக்கெட் ஸ்டேடியமும், நிலமும் பிசிசிஐ பெயரில் அதன் சொத்தாக இருக்கும். எந்த மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் சொந்தமானதாக இது இருக்காது.
டெல்லியிலேயே இந்த ஸ்டேடியம் கட்டப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஸ்டேடியம் கட்டி முடிக்கப்படுமாம். இங்கு உலகக் கோப்பை, ஐபிஎல் போட்டிகள் போன்ற முக்கிய போட்டிகளின் இறுதிப் போட்டிகளை நடத்த பிசிசிஐ உத்தேசித்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த ஸ்டேடியமும் சொந்தமாக இல்லை. டெல்லியில் கட்டப்படவுள்ள ஸ்டேடியம்தான் முதல் சொந்த ஸ்டேடியமாகும். இந்த ஸ்டேடியத்தில் அனைத்து அதி நவீன வசதிகளும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டி 20 உலகக் கோப்பை மற்றும் 9வது ஐபிஎல் தொடரின்போது சில போட்டிகளை கடைசி நேரத்தில் மாற்றும் சூழலை சந்தித்தது பிசிசிஐ. டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரின்போது தரம்சலாவில் நடககவிருந்த போட்டிகளை கொல்கத்தாவுக்கு மாற்ற நேரிட்டது. அதேபோல ஐபிஎல் தொடரின்போது மகாராஷ்டிராவி்ல் நடந்த போட்டிகளை மாற்ற நேரிட்டது.
இ்ப்படி வருடா வருடம் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தபடி இருப்பதால் பேசாமல் சொந்தமாக ஸ்டேடியம் கட்டி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாம்.