முடிவுக்கு வருது முடக்கம்.. ஜூன் இறுதியில் கையைக் காலை நீட்டி பிராக்டிக்ஸ்.. தயாராகும் கோலி அன் கோ
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஜூன் மாத இறுதியில் பயிற்சிகள் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கொரோனாவைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் முடங்கிப் போயுள்ளன. படிப்படியாக இப்போது பயிற்சிகளை சில நாடுகளில் தொடங்கி வருகின்றனர். இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ துடித்துக் கொண்டுள்ளது.
ஆனால் ரசிகர்களை வைத்துக் கொண்டு போட்டிகளை நடத்த முடியாத நிலையே இன்று வரை உள்ளது. காரணம் இந்தியா முழுவதுமே கொரோனாவின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருவதும், உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும்தான்.

வீரர்களுக்குப் பயிற்சி
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், 100 சதவீதம் நம்பிக்கை வந்தவுடன் வீரர்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு வரவழைக்கப்படுவர். பயிற்சி குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் பரிசீலித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்றார்.

அனுமதி கிடைச்சாச்சு
பயிற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஏற்கனவே நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. எனவே கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிக்காக தயாராக ஆரம்பித்துள்ளனர். கடந்த 3 மாதமாக எந்த பயிற்சியும் எடுக்க முடியாமல் வீரர்கள் முடங்கிப் போயுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். உலகம் முழுவதும் விளையாட்டுத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்திப் போட்டுள்ளனர். ஐபிஎல்லும் ஒத்திப் போயுள்ளது.

வார்னர் பயிற்சி
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியும் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறதுது. அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ யோசித்து வருவதாக ஒரு தகவல் உள்ளது. இங்கிலாந்தில் வீரர்கள் ஏற்கனவே பகுதி பகுதியாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தெற்கு சவுத்வேல்ஸில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஜூன் மாத இறுதியில்
இந்த நிலையில் பிசிசிஐயும் தனது வீரர்களுக்கு பயிற்சியைத் தொடங்குவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளது. எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, எங்கு பயிற்சி தருவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஜூன் மாத இறுதியில் பயிற்சிகள் தொடங்கும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications