டெல்லி: 2027 உலகக் கோப்பையை வெல்வதே தற்போதைய முக்கிய இலக்கு என இந்திய ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். கடந்த 2023 உலகக் கோப்பையை நூலிழையில் கோட்டைவிட்ட நிலையில், அடுத்த தொடரில் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அணியின் முதன்மை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2023 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று அசத்தியது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை குறித்து பிசிசிஐ நமன் விருது விழாவில் பேசிய கில், "நிச்சயமாக, அதுதான் எங்களின் மிக முக்கியமான இலக்கு" என்று கூறினார்.

இந்தியாவில் நடைபெற்ற கடந்த இறுதிப் போட்டியைப் பற்றி நினைவுகூர்ந்த கில், "கடந்த முறை இந்தியாவில் கோப்பைக்கு மிக நெருக்கமாக இருந்தோம். தென்னாப்பிரிக்காவில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு ஒரு சிறந்த சூழ்நிலை. எந்தவொரு வடிவத்திலும் நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்வதுதான் எங்களின் இறுதி இலக்கு. இந்த எண்ணம் எப்போதும் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது," எனத் தெரிவித்தார்.

இதேபோல், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், எந்தப் போட்டியை மீண்டும் ஆடி வெல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிதான் எனத் தெரிவித்தார். "நிச்சயமாக, அகமதாபாத்தில் நடந்த 2023 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை மீண்டும் ஆடி வெற்றி பெறவே நான் விரும்புவேன்," என்றார்.
இந்தியாவின் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றி, எதிர்கால ஐசிசி தொடர்களில் பல்வேறு இந்திய அணிகளின் வெற்றிகளுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது என்று சூர்யகுமார் யாதவ் சுட்டிக்காட்டினார். "நமக்கு ஒரு சிறு தீப்பொறி அல்லது ஒரு படிதான் தேவைப்பட்டது. அதை 2024-ல் நாம் கடந்துவிட்டோம். அதன்பிறகு 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025-ல் மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பை, பின்னர் 2026 நிகழ்வுகள் என தொடர்ச்சியான வெற்றிகள் வரும்," என்று அவர் கூறினார்.
"அந்த ஒரு படி மிக முக்கியமானது. ஐசிசி கோப்பையை வெல்வதற்கு என்ன தேவை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள அந்த வெற்றி மிகவும் அவசியமானது. இப்போது பின்னோக்கிப் பார்க்கும் எண்ணம் இல்லை. இந்த அற்புதமான விஷயம் தொடங்கியுள்ளதால், முடிந்தவரை பல கோப்பைகளை வெல்ல முயற்சிப்போம்," என்றும் சூர்யகுமார் நம்பிக்கையுடன் கூறினார்.
சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிகளின் ஹாட்ரிக் ஆசையையும் வெளிப்படுத்தினார். மேலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்வதையும் இந்தியா இலக்காகக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். "கிரிக்கெட் போன்ற ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வில் இணைவது சிறப்பானதாகும்," என்று அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அந்த 2028 ஆண்டு, ஒலிம்பிக்ஸ் மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டு பெரிய நிகழ்வுகளைக் கொண்டுள்ளது என்பதையும் சூர்யகுமார் சுட்டிக்காட்டினார். "நாம் தொடர்ச்சியாக இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்றிருக்கும் நிலையில், ஏன் மூன்றாவது முறையும் வெல்லக்கூடாது? நிச்சயம் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வெல்ல வேண்டும்," என்று அவர் உறுதியளித்தார்.