மும்பை: அணித் தேர்வு குறித்து வாய் கிழியப் பேசி விளக்குவது இந்திய அணித் தேர்வாளர் குழுத் தலைவர்களின் வழக்கமாகும். ஸ்ரீகாந்த்தெல்லாம் விட்டால் பத்து நாளைக்குப் பேசிக் கொண்டே இருப்பார். அதுவும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான அணி என்னும்போது நிறையப் பேச வேண்டும், விளக்க வேண்டும். ஆனால் தேர்வாளர் குழுத் தலைவரான சந்தீப் பாட்டீல் அணித் தேர்வு குறித்து வாயே திறக்காமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணித் தேர்வாளர் குழுத் தலைவராக பாட்டீலை நியமித்து 2 வருடங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால் இதுவரை பெரிய அளவில் பேசியதே இல்லை பாட்டீல். நேற்று உலகக் கோப்பைப் போட்டிக்கான அணி அறிவிப்பின்போது கூட அவர் மணி ரத்தினம் பாணியில் லேசாக சில வார்த்தைகளை மட்டுமே உதிர்த்தார். மற்றபடி வாயே திறக்கவில்லை.

ஏன் இவரு இப்படி இருக்காரு.. என்று எல்லோரும் கவலையுடனும், கடுப்புடனும் கேட்கும் அளவுக்கு சந்தீப் பாட்டீல், சைலன்ட் பாட்டீலாக இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையக அலுவலகத்திற்கு உலகக் கோப்பைப் போட்டிக்கான அணித் தேர்வு குறித்த அறிவிப்புக்காக செய்தியாளர்களை பிசிசிஐ செயலாளர் சஞ்சய் படேல் அழைத்திருந்தார். இதை ஏற்று பலரும் குவிந்து விட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த படேலுடன், பாட்டீலும் இருந்தார். ஆனால் பாட்டீல் பேசவே இல்லை. கேள்விகளுக்கு படேல்தான் பதிலளித்தார்.
ஒரு வார்த்தை கூட அவர் செய்தியாளர்களிடம் பேசவில்லை. படேலுக்கு உதவியாக சில வார்த்தைகளை அவரிடம் மட்டும் பேசிய பாட்டீல், அணித் தேர்வு குறித்தோ, யுவராஜ் சிங் உள்ளிட்ட சிலரை சேர்க்காதது குறித்தோ விளக்கவும் இல்லை. அதுதொடர்பான கேள்விகளுக்குப் பதில் தரவும் இல்லை.
செய்தியாளர்களின் அனைத்துக் கேள்விகள், சந்தேகங்களுக்கு சஞ்சய் படேல்தான் பதிலளித்தார், விளக்கினார், தெளிவுபடுத்தினர். மற்றபடி சந்தீப் பாட்டீல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முக்கிய வீரர்களில் சந்தீப் பாட்டீலும் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் பாட்டீல் இப்படி மகா அமைதி காக்க ஒரு முக்கியக் காரணமும் உண்டு. அதாவது முன்பு ஸ்ரீகாந்த் தலைமை தேர்வாளராக இருந்தபோது ஷேவாக் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மகா கோபமாக, கடுப்பாக ஒரு பதிலை சூடாக கொடுத்து விட்டார். இதனால் பத்திரிகையாளர்கள் கடுப்பாகி விட்டனர். இதையடுத்து தலைமைத் தேர்வாளர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது.. அதனால்தான் சந்தீப் பாட்டீல் ஒரு வார்த்தை கூட பேசாமல் கம்மென்று உட்கார்ந்திருந்ததாக கூறுகிறார்கள்.
அதுக்காக இப்படியா பாட்டீல்.. ச்சும்மா ஏதாச்சும் பேசியிருக்கலாமே.. !