“நீங்க ஓய்வு பெற வேண்டாம்.. ஆனா நாங்க அத செய்வோம்” சீனியர் வீரர்களுக்கு பிசிசிஐ வைத்த செக்.. அச்சோ!
மும்பை: இந்திய டி20 அணியில் இருந்து ரோகித், கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து பிசிசிஐ புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி 3 வாரங்கள் ஓடிவிட்டன. எனினும் அதுகுறித்த விமர்சனங்களும், தோல்விக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் இன்னும் நீடித்துக்கொண்டே தான் உள்ளன.
அதன்படி சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழுவை நீக்கி பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக சீனியர் வீரர்களின் ஓய்வு விவகாரம் வெடித்துள்ளது.

சீனியர்களின் ஓய்வு
அதாவது கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், தினேஷ் கார்த்திக், முகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. வயதாகிவிட்டதால் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூறிவிட்டு, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முற்றிலும் புதிய படையை உருவாக்க திட்டமிட்டனர்.

பிசிசிஐ தந்த தகவல்
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி புதிய தகவலை கொடுத்துள்ளார். அதில், எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெறக்கூறி பிசிசிஐ அழுத்தம் கொடுக்காது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அவர்களுக்கு ஓய்வு அறிவிக்க விருப்பமில்லை என்றால் ஓய்வு பெற வேண்டாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இனி சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படாது.

ஆனால் வாய்ப்பு இல்லை
சீனியர் வீரர்கள் அனைவரும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளனர். அவர்களுக்கு டி20ல் வாய்ப்பே தரப்போவதில்லை. 2023ல் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை இருப்பதால் அதற்கேற்றார் போல தான் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வீரர்களின் அறிவிப்புகள் எதுவும் பிசிசிஐ-ன் திட்டங்களை மாற்றாது எனக்கூறியுள்ளார்.

இந்திய அணி அட்டவணை
2023ம் ஆண்டு நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் 50 ஓவர் உலகக்கோப்பை வருகிறது. எனவே அதுவரை இந்தியாவுக்கு மொத்தம் 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நியூசிலாந்துடனான தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications