மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (BCCI) இருக்கும் அதிகாரிகள் சிலருக்கு ஒரு நாளுக்கான செலவுத்தொகையாக மட்டுமே ₹40,000 வரை வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிசிசிஐயில் இடம்பெற்றிருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கிரிக்கெட் போட்டிகளின் ஏற்பாட்டிற்காகவும், போட்டிகளின் போதும் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.
அதற்கான தினசரி உதவித்தொகையாக குறைந்தபட்சம் ₹10,000 முதல் அதிகபட்சம் ₹40,000 வரை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு நாளுக்கான தினசரி உதவித்தொகை மட்டுமே. ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களுக்காக மொத்தமாக பல லட்சங்களை பிசிசிஐ ஊழியர்கள் தினசரி உதவித்தொகையாக பெற்று வருவது தெரியவந்துள்ளது.

இதற்கு முன், பிசிசிஐ அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்கள் சிலரும் இந்தப் தினசரி உதவித்தொகையை பயணமே செய்யாமல் பெற்று வந்ததாகவும், அதில் தற்போது மாற்றம் செய்திருப்பதாகவும் பிசிசிஐயில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் மூலம் தான், பிசிசிஐயில் இடம் பெற்றிருக்கும் ஊழியர்களுக்கு எவ்வளவு பயணப்படி வழங்கப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிசிசிஐ ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பயணம் செய்தால், அந்த பயணத்திற்கான செலவு, தங்கும் செலவு ஆகியவை அல்லாமல், இந்த தினசரி செலவுத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிசிசிஐ ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ராஜ வாழ்க்கை வாழ்வது தெரியவந்துள்ளது.
தற்போது எந்தெந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்:
5 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்குப் பயணம் செய்ய வேண்டி இருந்தால், ஒரு ஊழியருக்கு ஒரு நாளைக்கு தினசரி செலவு தொகையாக ₹10,000 வழங்கப்படும்.
நான்கு நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டி இருந்தால், ஒரு நாளுக்கான செலவுத் தொகை ₹15,000 வழங்கப்படும்.
இது இல்லாமல் ஒரு பயணத்துக்கான திடீர் செலவு தொகையாக ₹7,500 வழங்கப்பட்டு வந்தது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது. இனி ஒரு நாளைக்கு ₹10,000 மட்டுமே செலவுத் தொகையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு ஐபிஎல் தொடருக்கு அதிகபட்சமாக 70 நாட்கள் வரை ஒரு ஊழியர் பயணம் செய்தால், அதற்காக ₹7 லட்சம் ரூபாயை அவர் பெற முடியும்.
ஐபிஎல்-க்காக குறைந்த அளவிலேயே ஒருவர் பயணம் செய்திருந்தால், அதில் 60% வரை செலவு தொகையாக பெற முடியும் எனவும், ஐபிஎல் தொடரின் போது பயணமே செய்யாத ஒருவர் 40% வரை செலவு தொகையாக பெற முடியும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
பிசிசிஐயின் உயரதிகாரிகளான பிசிசிஐ தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது ஒரு நாளைக்கு 1000 டாலர் வழங்கப்படும். அதாவது சுமார் ₹84,000 ஒரு நாளைக்கு செலவு தொகையாக வழங்கப்படும்.
அவர்கள் இந்தியாவில் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க வேண்டி இருந்தால், அந்த ஒரு நாளைக்கு மட்டும் ₹40,000 வழங்கப்படும்.
அவர்கள் இந்தியாவில் பல நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தால், ஒரு நாளைக்கு ₹30,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.