தள்ளி போன உள்ளூர் தொடர்கள்
டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சையத் முஸ்தாக் அலி டி20 கோப்பை மற்றும் ரஞ்சி கோப்பை போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இந்த இரு தொடர்களில் 38 அணிகள் 245 போட்டிகளில் விளையாடவிருந்த சூழலில் ஒரு போட்டியும் நடத்தப்படாமல் வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.
செப்டம்பர் 19ல் ஐபிஎல் துவக்கம்
கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் ஐபிஎல் உள்ளிட்ட எந்த தொடரும் நடத்தப்படாத சூழலில் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 19ம் தேதி வரை யூஏஇயில் ஐபிஎல் 2020 போட்டித் தொடர் நடத்தப்பட உள்ளது. இதற்கென வரும் 20ம் தேதியையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் யூஏஇ பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அங்கு குவாரன்டைன், பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு தொடர்ந்து போட்டிகளிலும் ஈடுபட உள்ளனர்.
பிசிசிஐ திட்டம்
இந்நிலையில், அடுத்ததாக உள்ளூர் போட்டிகளிலும் கவனம் செலுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மற்ற தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் நவம்பர் 19ம் தேதி முதல் சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 மற்றும் ரஞ்சி போட்டிகளை நடத்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க முடியாத வீரர்கள்
ஆனால் நவம்பர் 10ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதால், அதில் பங்கேற்கும் சில வீரர்கள் இந்த உள்ளூர் தொடரின் ஆரம்ப போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னதாகவும் சில அணி வீரர்கள் வெளியேறும் நிலையிலும் 14 நாட்கள் குவாரன்டைன் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு பின்னரே இந்த தொடர்களில் விளையாட முடியும்.
தற்காலிகமானது என தகவல்
இந்நிலையில், இந்த உள்ளூர் போட்டிகள் குறித்து தற்காலிகமான பட்டியலே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு இதில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்றும் பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.