மும்பை : உலகிலேயே கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவது பிசிசிஐயால் மட்டும்தான். ஆண்டு ஊதியம் என தனி சம்பளம், ஒரு போட்டிக்கு என தனி சம்பளம், சதம் அல்லது ஐந்து விக்கெட் வீழ்த்தினால் அதற்கு தனி ஊதியம் என பல சம்பளம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி கடுமையாக தடுமாறிய நிலையில், பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதன் மூலம் வீரர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையில் பிசிசிஐ ஈடுபட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதாவது எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களில் நன்றாக வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமோ, அதேபோல் நன்றாக விளையாடி ரன்கள் சேர்க்கும் வீரர்களுக்கு சம்பளம் அதிகரிப்பும், சரியாக விளையாடாத வீரர்களுக்கு ஊதிய குறைப்பும் செய்ய பிசிசிஐ நடவடிக்கை எடுக்கப் போகிறது.
அதன்படி சரியாக விளையாடாத வீரர்களுக்கு வழங்கப்படும் போட்டி ஊதியம் அதிரடியாக குறைக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்கப் போகிறது. இதேபோன்று இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய ஒப்பந்தத்தில் சரியாக விளையாடாத நபர்களுக்கு சம்பளம் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு ஏ ப்ளஸ் பிரிவில் இருக்கும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்றால் ஏ பிரிவுக்கு மாற்றப்படுவார். இதேபோன்று கடந்த 2024 ஆம் ஆண்டு வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகளவு பங்கேற்கும் வகையில் பிசிசிஐ ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டு சீசனில் இருந்து நடத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதவீதம் ஒரு வீரர் பங்கேற்றால் அவருக்கு ஒரு போட்டிக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க பிசிசிஐ அறிவித்தது.
இதே ஒரு வீரர் 75% போட்டிகளை விளையாடினால் ஒரு போட்டிக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவு எடுத்தது. தற்போது இதிலும் பிசிசிஐ கை வைக்க போவது வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியாக விளையாட வீரர்களுக்கு சம்பள குறைப்பில் ஈடுபட்ட நிலையில், தற்போது அதே போன்ற ஒரு ஃபார்முலாவை இந்தியாவும் மேற்கொள்ள இருக்கிறது. இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அதன் பிறகு சாம்பியன்ஷி கோப்பை தொடரிலும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.