மும்பை: இந்திய கிரிக்கெட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில், புதியதொரு அணுகுமுறையை பிசிசிஐ கையாண்டு வருகிறது. நெருக்கடியான சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை சமாளிக்கும் வகையில், 30 முதல் 35 வீரர்களைக் கொண்ட ஒரு புதிய டி20 சர்வதேச அணியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இந்தியா இரண்டு தனித்தனி டி20 சர்வதேச அணிகளை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர், சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாரான வீரர்களைத் தொடர்ந்து உருவாக்கி வருவதால், இந்தியாவின் கிரிக்கெட் திறமைசாலிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட ஒரு சில வீரர்களை மட்டும் சார்ந்திராமல், பல வீரர்களை கொண்டு, ஒரே நேரத்தில் பல போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகளை உருவாக்கும் அவசியம் குறித்து பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.

இது குறித்து பேட்டியில் ஒரு பிசிசிஐ அதிகாரி, "ஆசியப் போட்டிகளும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளன. ஆகவே, ஒரே நேரத்தில் இரு டி20 அணிகளை களமிறக்க வேண்டும். இதற்காக சர்வதேசப் போட்டிகளுக்கு அழைக்கப்படும் வகையில் 30-35 வீரர்களைக் கொண்ட ஒரு பட்டளத்தை இப்போதிலிருந்தே வைத்திருப்பது அவசியம்," என்று கூறினார். வரவிருக்கும் அயர்லாந்து சுற்றுப்பயணம், இந்த வீரர்களை சோதிக்கும் ஒரு களமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அயர்லாந்து சுற்றுப்பயணம் ஒரு பரிசோதனைக் களமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு இளம் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள் சோதிக்கப்பட்டு, எதிர்காலத் தொடர்களுக்கு, குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்குத் தயாராக வழிவகுக்கும். இதன் மூலம் பிசிசிஐயால் ஒரே நேரத்தில் 2 இந்திய அணியை களமிறக்க முடியும்.
தேர்வாளர்கள் ஐபிஎல் தொடரின் இளம் நட்சத்திரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரியன்ஷ் ஆர்யா, அங்கிருஷ் ரகுவன்ஷி போன்ற பேட்ஸ்மேன்களும், ரஜத் படிதார், ஆயுஷ் பதோனி ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்களான ஷஷாங்க் சிங், அனுகுல் ராய் ஆகியோர் அணிக்கு சமநிலையைத் தருகின்றனர். பந்துவீச்சாளர்களில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, கார்த்திக் தியாகி, கலீல் அகமது ஆகியோர் கவனம் பெறுகின்றனர். விக்கெட் கீப்பரில் துருவ் ஜூரலும், ஒரு அணிக்குத் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயரும் முதன்மையாகப் பார்க்கப்படுகிறார்கள்.