டெல்லி: பிசிசிஐ-யின் அடுத்த புதிய தலைவர் யார் என்ற கேள்விக்கு, யாரும் எதிர்பாராத ஒரு பெயர் தற்போது முன்னணியில் அடிபடுகிறது. இந்தியாவிற்காக ஒரு சர்வதேசப் போட்டியில் கூட விளையாடாத, டெல்லி மாநில அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ-யின் அடுத்த தலைவராவதற்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் (AGM) வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் புதிய தலைவர், புதிய ஐபிஎல் சேர்மன் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இதற்கு முன்னதாக, பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் கலந்துகொண்ட ஒரு ரகசியக் கூட்டம், டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்தான், காலியாக உள்ள பதவிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து விவாதம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில், மிதுன் மன்ஹாஸ் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரகசியக் கூட்டத்திற்குப் பிறகு, தலைவர் பதவிக்கு மிதுன் மன்ஹாஸ்-இன் பெயரே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?
யார் இந்த மிதுன் மன்ஹாஸ் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்திய கிரிக்கெட் அணியில் ஒருமுறை கூட இடம்பிடிக்காத வீரர், எப்படி பிசிசிஐ-யின் தலைவர் பதவிக்கு வர முடியும் என்ற ஆச்சரியமும் ஏற்படலாம். ஆனால், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிதுன் மன்ஹாஸ் ஒரு ஜாம்பவான். டெல்லி அணிக்காக 157 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 45-க்கும் அதிகமான சராசரியுடன் 9714 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 27 சதங்களும் அடங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2014 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக இவர் 12 போட்டிகளில் ஆடி உள்ளார். கிரிக்கெட் வீரராக ஓய்வு பெற்ற பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநராகவும் பணியாற்றி, நிர்வாக அனுபவத்தையும் பெற்றுள்ளார். இந்த விரிவான அனுபவமே, அவரை பிசிசிஐ தலைவர் பதவிக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய தலைவர் ரோஜர் பின்னி-யின் பதவிக்காலம் முடிவடைவதாலும், ஐபிஎல் சேர்மன் அருண் துமால் ஆறு ஆண்டு கால பதவியை நிறைவு செய்வதால் கட்டாய ஓய்வு காலத்திற்குச் செல்வதாலும் இந்தப் பதவிகள் காலியாகின்றன. முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியான சௌரவ் கங்குலி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ அமைப்பின் தலைவர் பதவி மட்டுமல்லாமல், அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழுவிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எஸ். சரத்-இற்குப் பதிலாக, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா-வும், சுப்ரத்தோ பானர்ஜி-க்குப் பதிலாக, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங்-கும் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய மாற்றங்கள், செப்டம்பர் 28 முதல் அமலுக்கு வரும். எனவே, அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, தற்போதைய தேர்வுக் குழுவே தேர்வு செய்யும். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் 28 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.