மும்பை: முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரும், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான ரோஜர் பின்னி, 2025 ஜூலை 19 அன்று தனது 70வது வயதை எட்டுவதால், தனது பதவியை விட்டு விலக உள்ளார்.
2022 அக்டோபரில் BCCI-யின் 36வது தலைவராக நியமிக்கப்பட்ட பின்னி, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பிறகு பதவியேற்றார். அவரது கிட்டத்தட்ட மூன்று ஆண்டு கால பதவிக்காலத்தில், இந்திய அணி 2024 T20 உலகக் கோப்பையையும், 2025 சாம்பியன்ஸ் டிராஃபியையும் வென்றது.

மேலும், பெண்கள் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டதும் அவரது தலைமையின் கீழ் நடந்த முக்கிய நிகழ்வாகும். இருப்பினும், BCCI-யின் அரசியல் சாசனத்தில் உள்ள கட்டாய விதிமுறையால் அவரது தலைமை இப்போது முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
2016ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் ஆர்.எம்.லோதா கமிட்டியின் பரிந்துரைகளைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட BCCI அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்ட வயது வரம்பு விதி, எந்தவொரு அதிகாரியும் 70 வயதை எட்டிய பிறகு பதவியில் நீடிக்க முடியாது என்று கூறுகிறது.
BCCI வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபர்:இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.70 வயது அல்லது அதற்கு மேல் இருக்கக்கூடாது.திவாலானவராகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ இருக்கக்கூடாது.அமைச்சர், பொது ஊழியர் அல்லது வேறு விளையாட்டு அமைப்பின் பதவியாளராக இருக்கக்கூடாது.
BCCI-யில் ஒட்டுமொத்தமாக 9 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருக்கக் கூடாது. இதனால், பின்னி விலகுவதைத் தொடர்ந்து, BCCI துணைத் தலைவரான ராஜீவ் ஷுக்லா இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்க முன்னணியில் உள்ளார். 65 வயதான சுக்லா, முன்னதாக IPL தலைவராக பணியாற்றியவர்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் உள்ளார். 2025 செப்டம்பரில் நடைபெறவுள்ள BCCI-யின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் அடுத்த முழு நேரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஷுக்லா இந்தப் பதவியை வகிக்கலாம். BCCI அரசியல் சாசனப்படி, பின்னி தனது 70வது பிறந்தநாளில் இந்த பதவிக்கு தகுதியற்றவராவார், மேலும் ஷுக்லா அந்த இடத்தை நிரப்பலாம்.