மும்பை: லாகூரில் இருந்து இந்தியா திரும்பிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு தொடர் நடக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இம்முறை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப பிசிசிஐ விரும்பாததால், ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆசியக் கோப்பை தொடரை நேரில் காண்பதற்காக பிசிபி சார்பாக பிசிசிஐ நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இருவரும் அட்டாரி வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றனர். அங்கிருந்து லாகூர் சென்ற இருவரும் ஆசியக் கோப்பை போட்டிகளை கண்டு ரசித்தனர். இந்த நிலையில் ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா இருவரும் இந்திய திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பயணம் குறித்து ரோஜர் பின்னி பேசுகையில், பாகிஸ்தானில் நாங்கள் ராஜாக்களை போல் வரவேற்கப்பட்டோம். மிகச்சிறந்த பயணங்களில் ஒன்றாக இது அமைந்தது. இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு ஒருநாள் தொடர் நடக்குமா என்பது தெரியாது. ஆனால் வரும் காலத்தில் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனை பிசிசிஐ-யால் மட்டும் முடிவு செய்ய முடியாது.
இது இரு நாடு அரசுகளுக்கு இடையிலான பிரச்சனை. அதனால் அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அடுத்த சில நாட்களில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வரவுள்ளனர் என்று தெரிவித்தார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின் பிசிசிஐ அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு ஒருநாள் தொடர் கடைசியாக 2006ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது. அதேபோல் பாகிஸ்தான் அணி கடைசியாக 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.