அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி 3வது டி20 உலகக்கோப்பை வென்றுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபாரமாகச் செயல்பட்ட இந்திய அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. மேலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்று, இந்தத் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற வீரர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சி ஊழியர்களுக்கும் மற்றும் தேர்வுக்குழுவினருக்கும் வாரியம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கும் வாரியம் நல்வாழ்த்துகளைக் கூறுகிறது" என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2024 டி20 உலகக்கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்ற போது பிசிசிஐ 125 கோடி பரிசுத் தொகையை அறிவித்து இருந்தது. தற்போது அதில் இருந்து 6 கோடி உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இடையே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய ஒருநாள் அணிக்கு 58 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்களால் 20 ஓவர்களில் 255 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் நியூசிலாந்து பேட்டிங் வரிசையைச் சரித்தனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, 131 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்ததன் மூலம், வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களின் கடின உழைப்பை பிசிசிஐ அங்கீகரித்துள்ளது. இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.