டாக்கா: வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சையை அடுத்து, ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. அத்துடன், பாதுகாப்பு கவலை காரணமாக 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இடமாற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை அணுகியுள்ளது.
பிசிசிஐ அறிவுறுத்தலால் ரஹ்மான் ஐபிஎல் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால், பங்களாதேஷில் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பும் விமர்சனமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்தும் முடிவை அந்நாட்டு அரசு எடுத்தது. இதனையடுத்து, வங்கதேச தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

வங்கதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், "பிசிசிஐ உத்தரவின்படி, எங்கள் நட்சத்திர வீரர் முஸ்டாபிசுர் ரஹ்மான் மார்ச் 26, 2026 அன்று தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான நியாயமான காரணம் அறியப்படவில்லை. இம்முடிவு பங்களாதேஷ் மக்களிடையே வேதனையையும், மன வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
"இந்த சூழ்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை, அனைத்து ஐபிஎல் போட்டிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட வேண்டும்" என அதே அறிக்கையில் உத்தரவை பிறப்பித்துள்ளது. ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவசரக் கூட்டத்தை நடத்தி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை அணுகியது. 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பங்களாதேஷின் போட்டிகளை பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி இந்தியாவிலிருந்து இடமாற்றும்படி கோரிக்கை விடுத்தது.
இந்த சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிசிசிஐ அதிகாரி ஒருவர், "ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட செயலைச் செய்கிறது. அவர்களுக்குக் கஷ்டமாக இருந்ததால்தான் இப்படி ஓர் எதிர்வினை" என்றார். எனினும், இந்த முடிவால் இந்தியாவுக்கோ ஐபிஎல்லுக்கோ பெரிய பாதிப்பு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளன. போட்டிகள் இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.