கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் தாக்கிய 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் வகையில், இந்தியாவுடன் இணைந்து நிவாரண நிதி கிரிக்கெட் போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒப்புதல் அளிக்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சமீபத்தில் உலுக்கிய 'டிட்வா' புயல், அந்த நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இப்புயலால் சுமார் 600 பேர் உயிரிழந்ததோடு, 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 14,400 கோடி ரூபாய்) மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டும் நோக்கில், வரும் டிசம்பர் மாதம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சிறப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) விருப்பம் தெரிவித்திருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, "டிசம்பர் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு போட்டிகளை நடத்தி, அதன் மூலம் நிதி திரட்டத் திட்டமிட்டோம். இது குறித்து பிசிசிஐ-யிடம் பேசினோம். ஆனால், குறுகிய காலத்திற்குள் வணிக ரீதியான ஏற்பாடுகளை இறுதி செய்ய முடியாத காரணத்தால், இப்போட்டியை நடத்த இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவுடனான போட்டி ரத்து செய்யப்பட்டாலும், நிதி திரட்டும் முயற்சியை இலங்கை கைவிடவில்லை. தம்புள்ளாவில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று டி20 போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும், புயல் நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்போவதாக இலங்கை வாரியம் அறிவித்துள்ளது.
சிறப்புப் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்ட இந்திய அணியின் இலங்கைப் பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை. வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் மைதானங்களை மேம்படுத்தும் பணியில் இலங்கை வாரியம் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாகக் கொழும்பு மைதானத்தில் இரவு நேரப் போட்டிகளை நடத்தும் வகையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மின்விளக்கு கோபுரங்களை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மட்டும் சுமார் 175 கோடி இலங்கை ரூபாய் செலவிடப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியப் பொருளாளர் சுஜீவ கோடலியட்டா தெரிவித்துள்ளார்.