கங்குலிக்கு தெரியாமல் ரஞ்சி அட்டவணை ரிலீஸ்.. பிசிசிஐக்குள் என்னதான் நடக்கிறது?
மும்பை: சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ. ஆனால், இந்த விஷயம் கங்குலி தலைமையிலான டெக்னிகல் கமிட்டிக்கு தெரிவிக்கப்படவில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் பற்றிய அறிவிப்புகள் கங்குலி தலைமையில் இயங்கும் டெக்னிகல் கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், தற்போது வெளியிடப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து எந்த வகையிலும் அந்த கமிட்டிக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த 2000 போட்டிகளுக்கான நெடிய அட்டவணையால், புதிய அணிகளுக்கான நிதி மற்றும் முன்னேற்பாடுகள் இல்லாத நிலை, மைதானங்கள் மற்றும் நடுவர் பற்றாக்குறை, வீரர்கள் சம்பள விகிதம், என பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது.
இது குறித்து டெக்னிகல் கமிட்டியை சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், “டெக்னிகல் கமிட்டி, ரஞ்சி ட்ராபி குறித்து தெரிவித்த எந்த யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டியின் தலைமைக்கு பின், பிற கமிட்டிகள், கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. டெக்னிகல் கமிட்டி இதுவரை சிறப்பான செயல்பாடுகளை செய்து வந்தது. ஆனால், தற்போது அது புறக்கணிக்கப்பட்டு, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது” என்றார்
கங்குலி தலைமயிலான கமிட்டி, பீகார், உத்தரகாண்ட் போன்ற அணிகள் வயது வரம்பு அடிப்படையிலான போட்டிகளில் அனுமதிக்கப்பட்டு படிப்படியாக ரஞ்சி ட்ராபி தொடரில் அனுமதிக்கலாம் என தெரிவித்து இருந்தது. அதே போல, வடகிழக்கு மாநில அணிகளுக்கு வாய்ப்புகள் மற்றும் உதவிகள் வழங்க வேண்டும் என கூறியிருந்தது.
தற்போது அனைத்து அணிகளும் நேரடியாக ரஞ்சி ட்ராபி விளையாட உள்ளன. பல காலமாக ரஞ்சி விளையாடி வரும் அணிகள் “எலைட்” என்ற பெயரில் மூன்று பிரிவாகவும், புதிய அணிகள் “ப்ளேட்” என்ற பெயரில் தனி பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ப்ளேட் பிரிவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் எலைட் பிரிவுக்கு தகுதி பெறும், என்ற வகையில் தற்போது விதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த பாகுபாடு முறையால், புதிய அணிகள் எந்த வகையிலும் பயன்பெற முடியாது என கூறுகிறார்கள், டெக்னிகல் கமிட்டி உறுப்பினர்கள். எந்த வசதிகளும் இல்லாத புதிய அணிகள் எப்படி வீரர்களை தயார் செய்யும், இந்த ப்ளேட் பிரிவில் உள்ள அணிகள் எப்போது மற்ற மாநில அணிகளுக்கு இணையாக வளரும் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.
பிசிசிஐ-இல் இருந்த தவறுகளை களைய வந்த நிர்வாக கமிட்டி, தற்போது குழப்பங்களை ஏற்படுத்தி வருவது, சமீப நாட்களில் வரும் செய்திகளை பார்த்தாலே தெரிகிறது.
Story first published: Wednesday, July 25, 2018, 15:41 [IST]
Other articles published on Jul 25, 2018


Click it and Unblock the Notifications