மும்பை : உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வீரர்களுக்கு பல நல்ல ஏற்பாடுகளை செய்து தருவது வழக்கம். இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நெடுந்தொடர்களில் பங்கேற்க வெளிநாடு சென்றால் வீரர்கள் தனிமையாக இருக்கக் கூடாது என்பதற்காக வீரர்களின் குடும்பத்தினரையும் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல பிசிசிஐ ஏற்பாடு செய்து வந்தது.
இந்த நிலையில் வீரர்களின் மனைவி ஹோட்டலில் தங்குவதால் அது கவன சிதறலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வீரர்கள் குடும்பத்தினர் அருகில் இருக்கும் போது வீரர்களின் செயல்பாடு அதிகரிக்கும் என நினைத்துதான் பிசிசிஐ இந்த ஏற்பாடு செய்தது.

ஆனால் அதற்கு நேர் மாறாக வீரர்களின் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், தற்போது பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய வழிமுறைகளை வகுத்திருக்கிறது.
அதன்படி இனி எந்த ஒரு கிரிக்கெட் வீரர்களின் மனைவியும் தொடர் முழுவதும் வெளிநாட்டில் தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படாது என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்திய அணி 45 நாட்களுக்கு மேல் ஒரு தொடரில் வெளிநாட்டில் பங்கேற்கிறது என்றால் கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்படும் என பிசிசிஐ கூறி இருக்கிறது.
இதேபோன்று இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் இனி அணியின் பேருந்தில் மட்டும்தான் செல்ல வேண்டும் என்றும், நாங்கள் தனியாக காரில் வருகிறோம். குடும்பத்தினருடன் வேறு வாகனத்தில் வருகிறோம் என்று சொல்லக்கூடாது என பிசிசிஐ நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. இதேபோன்று திருமணம் ஆகாத வீரர்கள் தங்களுடைய கேர்ள் பிரண்டையும் அழைத்து வர கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருக்கிறது. பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.