டெல்லி: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலை அடுத்து, பிசிசிஐ இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) பிசிசிஐ கடிதம் எழுதியிருப்பதாகவும், அதில் இனி நடைபெறும் ஐசிசி தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் சேர்த்து போட்டிகளை நடத்த வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களிலும், ஆசியக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

அந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் சேர்த்து, முதல் சுற்றிலேயே இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும். இனி அந்த முறையைக் கைவிடுமாறு பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் குரூப் சுற்றுப் போட்டி இடம் பெற உள்ளது. அதை மாற்றி அமைக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆடவர் அணிகள் அடுத்த ஆண்டு ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் மோத உள்ளன. பொதுவாக இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கான விளம்பர வருவாயை வைத்துதான் ஐசிசி தொடர்கள் திட்டமிடப்படுகின்றன. அதை வைத்துதான் ஒளிபரப்பு உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளைத் தவிர்க்க முயன்றால், அதனால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையேதான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது. முதல் சுற்றில் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் போட்டிகளைத் தவிர்க்குமாறு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது ஐசிசி தலைவராக முன்னாள் பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா இருக்கிறார். எனவே, பிசிசிஐக்கு சாதகமான முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்த மொஹ்சின் நக்வி இருக்கிறார். எனவே, ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை தவிர்க்குமாறு பிசிசிஐ கோரினாலும் அது ஏற்கப்படுமா? என்ற கேள்வி உள்ளது.
அது மட்டுமின்றி வேறு ஒரு சிக்கலும் உள்ளது. 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோத உள்ளன. இதற்கான ஒளிபரப்பு ஒப்பந்தம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா இருந்தபோது கையெழுத்தானது.
அதில், அடுத்த நான்கு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்களின் ஒளிபரப்பு உரிமம் 1450 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆசியக் கோப்பை தொடரிலும் குரூப் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் மோதும் வகையிலும், சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று இரண்டாவது முறையாக மோதும் வகையிலும் அட்டவணை தயாரிக்கப்படும் என ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இத்தனை பெரிய தொகைக்கு அந்த தொடர் விற்கப்பட்டுள்ளது. எனவே, அதில் மாற்றம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்.